

செங்கல்பட்டில் 250 மாணவர்கள் பங்கேற்று 1650 பாடல்களுக்கு 150 மணி நேரம் தொடர்ந்து நாட்டியமாடிய சாதனையை ஆளுநர் ரோசய்யா பாராட்டினார்.
இந்த சாதனையை விநாயகா நாட்டியாலயா பள்ளி மாணவ-மாணவிகள் நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்து நடனப் பள்ளியின் நிர்வாக இயக்குநர் மீனாட்சிபிரியா ராகவன் கூறியதாவது: நான் என்னுடைய 3 வயதிலேயே முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நாம் பெற்ற கலையை பலருக்கும் கற்றுத்தரும் நோக்கில் 20 ஆண்டுகளுக்குமுன் இந்த விநாயகா நாட்டியாலயா பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினேன். மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளும் ஆர்வமாய் பரத நாட்டியத்தை ஈடுபாட்டோடு கற்றுக் கொள்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பரத நாட்டியத்தில் ஏதாவதொரு சாதனையை செய்ய வேண்டு மென திட்டமிட்டோம். இதற்காக இடைவிடாத முயற்சி மேற்கொள் ளப்பட்ட நிலையில் மாணவர்களின் ஒத்துழைப்பும் இணைந்ததால் சாதனை நடன நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தோம். இதன்படி, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 6-ம் தேதி வரை தொடர்ந்து 150 மணி நேரம் 250 மாணவர்கள் 1650-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனமாடினார்கள்.
இதை அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கியுள்ளது. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு, தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டு போன்றவற்றின் சாதனைச் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தொடர் சாதனை நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ - மாணவிகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, “நமது பாரம்பரிய பரத நாட்டியக் கலையை இளைய வயதிலேயே குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பது அவர்களது சிந்தனையை செழுமைப்படுத்திட உதவும். அதிலும்,முறையான பயிற்சிகள் மூலமாக தொடர் நடன சாதனையை செய்திருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்” என்று பேசினார்.