Last Updated : 15 Jun, 2020 09:42 AM

 

Published : 15 Jun 2020 09:42 AM
Last Updated : 15 Jun 2020 09:42 AM

அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான காரணம் என்ன?- போக்குவரத்துக் கழகம் விளக்கம்

பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கும் விழுப்புரம் பேருந்து நிலையம்.

விழுப்புரம்

உள்ளூர் வழித்தடங்களில் டீலக்ஸ் பேருந்துகளை இயக்கி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதுமான பொது முடக்கம் வருகிற ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பொதுமுடக்கத்தை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நீட்டித்துள்ள மாநில அரசுகள், தங்களது மாநிலங்களில் கரோனா தொற்றுக்கு ஏற்றவாறு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி பொதுப் பேருந்து போக்குவரத்தை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. அதேபோல் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை. ஆனால், மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பயணத்துக்கு இ-பாஸ் கட்டாயம். எனினும், மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்துப் போக்குவரத்துச் சேவைகளுக்கான தடை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கையில் 60 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பேருந்துகளை முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு போக்குவரத்துச் சேவை தொடங்கியது.

60 சதவீதப் பயணிகளுடன் இயக்கப்படும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தபோது, இதற்கு விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துத் துறை அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவித்தது.

ஆனால், சாதாரண கட்டணத்திற்குப் பதிலாக டீலக்ஸ் பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக விழுப்புரத்திலிருந்து செஞ்சிக்கு சாதாரணக் கட்டணம் ரூ.25 வசூலிக்கவேண்டும். ஆனால், டீலக்ஸ் பேருந்துக் கட்டணமான ரூ.31 வசூலிக்கப்படுகிறது. லோக்கல் ரூட் எனப்படும் உள்ளூர் வழித்தடங்களில் சாதாரணப் பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படவேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என பயணிகள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் 60 சதவீதப் பயணிகள் பயணிக்காமல் அதிகபட்சம் 30 சதவீதப் பயணிகளே பயணிக்கின்றனர். கிராமப்புறமக்கள் வெளியே வர கரோனா பரவல் அச்சம் காரணமாக விரும்புவதில்லை. மேலும் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைவாகவே உள்ளது. இதனால் நிர்வாகச் செலவை ஈடுகட்ட டீலக்ஸ் பேருந்துக்கான கட்டணம் வசூலிக்கப்படுவது உண்மைதான் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x