Published : 14 Jun 2020 07:25 PM
Last Updated : 14 Jun 2020 07:25 PM

காணொலி வழியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஜெ.அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம்

திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 14), மாலை 5 மணியளவில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இரங்கல் தீர்மானம்

மக்கள் பணியில் இன்னுயிர் ஈந்த ஜெ.அன்பழகனின் தியாகத்தினைப் போற்றிடுவோம்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் தன் உடல்நிலையைவிட மக்களின் பசிப்பிணி நீக்குவதே முதன்மையானது என்கிற சீரிய பொதுநல சிந்தனையுடன், என்றென்றும் தலைமையின் வழிகாட்டுதலை சிறிதும் வழுவாமல் நிறைவேற்றுபவராகக் களப்பணியாற்றி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி மறைவெய்தி, திமுகவினர் அனைவரையும் கண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார்.

கருணாநிதியின் சென்னை மாவட்ட தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கி, மிசா சிறைவாச சித்திரவதைகளை மு.க.ஸ்டாலினுடன் ஏற்றுக்கொண்டு திமுகவைக் கட்டிக்காப்பதில் உறுதியாக விளங்கிய தனது தந்தை 'பழக்கடை' ஜெயராமனின் அடியொற்றி, ஜெ.அன்பழகனும் இளம் வயது முதலே கட்சிப்பணியில் மிகுந்த ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

கருணாநிதியைத் தனது தந்தையின் இடத்தில் வைத்துப் போற்றியவர். தியாகராயர் நகர் பகுதியிலும், ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டத்திலும், பிறகு சென்னை மேற்கு மாவட்டத்திலும் திமுகவுக்குச் சிறப்பாக வலுவூட்டியவர்.

எழுந்து நின்று அஞ்சலி செலுத்தும் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்த காலம்தொட்டே அவரது நம்பிக்கை மிகுந்த உடன்பிறப்பாக, கொள்கைத் தோழனாக, இயக்கத்தின் லட்சிய சகோதரன் என்கிற உணர்வுடன் நெருங்கிப் பழகி, உரிமையுடன் கருத்துகளை எடுத்துரைக்கக்கூடியவர் ஜெ.அன்பழகன்.

2001, 2011, 2016 என 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி உறுப்பினராக பேரவையில் மக்கள் நலன் குறித்து முழங்கியவர். தலைவர் கருணாநிதி குறித்து ஆளுங்கட்சியினர் அவதூறாகப் பேச முனைந்த போதெல்லாம், நொடிகூட தாமதிக்காமல் எழுந்து நின்று, எரிமலையாய்க் குமுறி எதிர்ப்பினைப் பதிவு செய்தவர்.

தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் உள்பட தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளை மிக பிரம்மாண்டமான முறையில், எழிலையும் எழுச்சியையும் கூட்டி, நடத்திக்காட்டி அனைத்து உடன்பிறப்புகளின் உள்ளங்களிலும் உயர்வான இடம் பெற்றவர்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவினையும், அதனையொட்டி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தினையும், அகில இந்தியத் தலைவர்கள் பலரும் வியந்து போற்றிடும் வண்ணம் நடத்திக் காட்டியவர்.

திமுக ரத்தம் பாய்ந்த கட்டுடல், கருணாநிதி ஒருவரே தலைவர் என்ற கடமை உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் கட்டுப்பாடு, மக்கள் மன்றத்திலும் சட்டப்பேரவையிலும் சளைக்காமல் போராடும் கனிவு கலந்த துணிவு, மனதில் பட்டதை ஒளிக்காமல் எடுத்துரைக்கும் மாண்பு என கண்ணியமும் உண்மையும் மிக்க உடன்பிறப்பாக கடைசி மூச்சுவரை திமுகவை முன்னிறுத்திச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.

திமுக தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் உடன்பிறப்பாக, மக்கள் நலனில் மாறாத அக்கறை கொண்டு செயலாற்றும் பொதுநலவாதியாக, தன் உயிரைவிட பட்டினிச்சாவினால் உயிரிழப்புகள் ஏற்படாதபடி காப்பதே முதன்மையானது என்கிற லட்சிய உறுதியுடன் சளைக்காமல் களப்பணியாற்றி, திமுக என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை, தன்னுடைய உயிரை ஈந்து தமிழ் மண்ணுக்கு நிரூபித்துள்ள தியாகச்சுடர் ஜெ.அன்பழகனுக்கு இந்தக் கூட்டம் வீரவணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும் என்ற உறுதியுடன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி மறைவு

கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோர்தம் பேரன்பைப் பெற்றவரும், தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளருமான சிங்கார ரத்தினசபாபதி முதுமையில் உடல்நலக்குறைவால் மறைவெய்தியது திமுகவுக்கு பேரிழப்பாகும்.

தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் திறம்படப் பணியாற்றிய ரத்தினசபாபதி, மின்வாரிய ஊழியர்களின் நலன்களுக்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

திமுக ஆட்சியில் மின் ஊழியர்களுக்கு, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு பெறுவதற்குக் காரணமாக இருந்தது, மத்திய- மாநில அரசு ஊழியர்களுக்கு இணையான 40 சதவீத ஊதிய உயர்வு இருமுறை கிடைத்திட துணை நின்றது, மின்வாரியத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்களை திமுக ஆட்சியில் நிரந்தரத் தொழிலாளர்களாக்கியது எனத் தன் வாழ்க்கையை மின் வாரிய ஊழியர்களுக்காக விருப்பமுடன் அர்ப்பணித்தவர் சிங்கார ரத்தினசபாபதி.

அதிமுக ஆட்சியில் மின் ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தியவர் மட்டுமின்றி- 2.57 சதவீத ஊதிய உயர்வை போராடிப் பெற்றுக் கொடுத்தவர். மின்வாரிய ஊழியர்களுக்கான நலனில் காட்டிய அதே ஆர்வத்தை, திமுகவின் வளர்ச்சிப் பணிகளிலும் காட்டிய சிங்கார ரத்தினசபாபதி, கருணாநிதியின் பாசத்தை நிரம்பப் பெற்றிருந்தவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மிகுந்த அன்பு பாராட்டியவர்.

மின்வாரிய ஊழியர்களுக்காகவும், திமுகவுக்காகவும் தொடர்ந்து பாடுபட்ட சிங்கார ரத்தினசபாபதியின் நினைவையும், தொழிற்சங்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும் போற்றி, இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றுறுதியும் கொண்டவரான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் மறைவ

தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றுறுதியும் கொண்டவரான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் கருணாநிதியின் பேரன்புக்குரியவர். தமிழக சட்டப்பேரவை மேலவையில் ஆசிரியருக்கான தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய பெருமைக்குரியவர். ஆசிரியர்களின் உரிமைகளைக் காப்பதற்காகக் கணப்பொழுதும் களைத்திடாமல் தொடர்ந்து போராடிய களச் செயற்பாட்டாளர். அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஆட்சியாளர்களுக்கு எதிரான வலுவான வாய்மையான போராட்டக் களத்தை உருவாக்கியவர். மேடையில் சொற்பொழிவாற்றுவதிலும், ஏடுகளில் கவிதைகளைத் தீட்டுவதிலும், திராவிட இயக்கத்தின் தீந்தமிழ் அடையாளமாக விளங்கிய பாவலர் க.மீனாட்சிசுந்தரத்தின் மறைவுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அ.அம்பலவாணன் மறைவு

நாகை மாவட்டத்தில் திமுகவை வளர்த்த முன்னோடிகளில் ஒருவரும் கருணாநிதியின் பேரன்பைப் பெற்றவரும் ஒன்றுபட்ட நாகை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தவருமான நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அ.அம்பலவாணனின் மறைவுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

க.அன்பழகனின் மகள் மணமல்லி மறைவு

மறைந்த பொதுச் செயலாளர் க.அன்பழகனை இழந்த துயரமே இன்னமும் இதயத்தை விட்டு நீங்காத நிலையில், அவரது மனம் நிறைந்த அருமை மகள் மணமல்லி, உடல்நலக் குறைபாட்டால் இயற்கையெய்தியது பெரும் துயரம் அளிக்கிறது. திமுக உணர்வும் கொள்கைப் பற்றும் கொண்ட குடும்பத்தின் வழித்தோன்றலான மணமல்லியின் மறைவுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x