Last Updated : 14 Jun, 2020 05:38 PM

 

Published : 14 Jun 2020 05:38 PM
Last Updated : 14 Jun 2020 05:38 PM

கல்வித் துறையில் தொடரும் முறைகேடுகள்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன் குற்றச்சாட்டு

செ.நடேசன்

தமிழக கல்வித் துறையில் முறைகேடுகளும் ஊழலும் தொடர்வதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.நடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

'கல்வித்துறையில் கணக்கின்றி பெருகும் ஊழல்கள், காவு கொடுக்கப்படும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்' என்ற தலைப்பில் இன்று (ஜூன் 14) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாட்டில் பள்ளி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளியிலும் 'பள்ளி மேலாண்மைக் குழுக்கள்' அரசு ஆணைப்படி அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்வியின் வளர்ச்சிக்காக கல்வித்துறை வழியாக அரசு வழங்கும் ஒருங்கிணைந்த கல்வி நிதியை பள்ளியின் தேவைகளுக்கேற்ப எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை இந்தக்குழு கூடி தீர்மானித்து அதன்படி செயல்படுத்திட வேண்டும்.

பள்ளிக்கு அளிக்கப்படும் இத்தகைய ஒருங்கிணைந்த கல்வி நிதிகள் பள்ளி மேற்பார்வைக் குழுவின் தலைவர், பொருளாளர் பெயரில் வங்கியில் கூட்டுக்கணக்காக பராமரிக்கப்பட வேண்டும்.

ஆனால், உண்மையில் நடப்பதென்ன? எடுத்துக்காட்டாக, பள்ளி நூலகத்துக்கு நூல்கள் வாங்கவும், மாணவிகளின் சுகாதாரத்துக்காக நாப்கின் எரியூட்டிகள் (ஒன்றின் விலை ரூ.32 ஆயிரம்) வாங்கவும், ஆங்கில மொழிப் பயிற்சிக்கான நூல்கள் வாங்கவும் இதன் மூலம் நிதி அளிக்கப்படுகிறது. ஆனால், இவற்றை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளியின் தேவையைக் கணக்கிட்டு தாங்களே நேரடியாக வாங்கிவிட முடியாது என்கிற நிலைதான் தற்போது இருக்கிறது.

கல்வித்துறையில் மேலே இருந்து ஒரு ரகசிய சுற்றறிக்கை ஒவ்வொரு பள்ளிக்கும் வரும். அதில், 'பள்ளிக்குத் தேவையான நூல்கள் அல்லது மாணவிகளின் சுகாதாரத்துக்கு அவசியமான எரியூட்டிகள் ஏற்கெனவே வாங்கப்பட்டு உங்கள் பள்ளிகளுக்கு அனுப்பட்டுள்ளன. அவற்றை பள்ளி மேலாண்மைக் குழுவே வாங்கியதாக தீர்மானமிட்டு தேதி குறிப்பிடாத காசோலையை நாங்கள் குறிப்பிடும் நிறுவனத்துக்குக் கொடுத்துவிடவேண்டும்’ என்று அந்த சுற்றறிக்கையில் ஆணையிடப்பட்டிருக்கும்.

ஆனால், அப்படி அளிக்கும் பொருள்கள் பயனற்றவைகளாக, விரைவில் பழுதடைந்து விடுபவைகளாக, இருக்கின்றன. பள்ளி மேலாண்மைக் குழுவே பொருள்களின் தரத்தை ஆய்வு செய்து நேரடியாக வாங்கும்போது இத்தகைய குறைபாடுகள் நிகழ வாய்ப்புக்கள் குறைவு.

பள்ளி மேலாண்மைக் குழுவை அமைத்துவிட்டு, அதன் அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டு, மேலே இருந்து பொருள்களை வாங்குபவர்கள் யார்? அவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது? பொருள்களை வாங்க நடத்தப்படும் பேரங்கள் என்ன? இவர்கள் நடத்தும் ஊழல்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுவை 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக்குவது ஏன்?

கல்வி நலனிலும் மாணவர் நலனிலும் அக்கறை கொண்டுள்ள மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும். வருவார்கள் என ஏழை, எளிய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்"

இவ்வாறு செ. நடேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x