Last Updated : 14 Jun, 2020 04:32 PM

 

Published : 14 Jun 2020 04:32 PM
Last Updated : 14 Jun 2020 04:32 PM

81 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள்: போதிய மீன்களும், விலையும் கிடைக்காததால் ஏமாற்றம்

மல்லிப்பட்டினம் பகுதியில் இன்று கரை திரும்பிய மீனவர்களிடம் சிக்கிய சொற்ப அளவிலான மீன்கள்.

தஞ்சாவூர்

கரோனா ஊரடங்கு, மீன்பிடித் தடைக்காலம் ஆகியவற்றால் 81 நாட்கள் கழித்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள், போதிய அளவு மீன்கள் கிடைக்காததாலும், உரிய விலை கிடைக்காததாலும் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி, கட்டுமாவடி வரை 73 மீனவக் கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகளும் உள்ளன.

இந்நிலையில், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 130 விசைப்படகுகளில், 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (ஜூ 13) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து செல்வதால், கடலில் மீன் வளம் அதிகரிக்கும். கூடுதலாக மீன், நண்டு, இறால் கிடைக்கும் என, மீனவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

கடலுக்குச் சென்ற மீனவர்கள்

இந்நிலையில் இன்று (ஜூன் 14) காலை முதல் கடலுக்குச் சென்ற படகுகள் மீன்பிடித்துத் திரும்பின. இதில் போதிய அளவு மீன்கள் பிடிபடாமலும், பிடித்து வந்த மீன், இறால், நண்டுகளுக்கு உரிய விலை கிடைக்காததாலும் மீனவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

மல்லிப்பட்டினம் பகுதியில் மீனவர்களிடம் சிக்கிய சொற்ப அளவிலான மீன்கள்.

இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் மீனவர் பெரியசாமி கூறும்போது, "சாதாரணமாக விசைப்படகுகளுக்கு டீசலுக்கு ரூ.20 ஆயிரம் செலவாகும். கடலுக்குள் பலத்த காற்று வீசுவதாலும், சனிக்கிழமை அதிகாலை கடலுக்கு செல்லாமல், காலதாமதாக சென்றதாலும், போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை. சம்பள ஆள் செலவு, ஏனைய செலவுகள் என 5 ஆயிரம் ரூபாய் ஆனது. மீன், இறால், நண்டு என கடலில் பிடிபட்டவை ரூ.15 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது. எனவே, மீனவர்களுக்கு சராசரி ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள், வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் வராததால், இறால் விலை ரூ.250 முதல் ரூ.300 வரையும், நண்டு விலை ரூ.150 முதல் ரூ.200 வரையும் விற்பனை ஆனது. மீன்களுக்கும் ஏலத்தில் போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரோனாவுக்கு முன்னர் இறால் ரூ.450 முதல் ரூ.600 வரையும், நண்டு ரூ.350 முதல் ரூ.400 வரையும் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

மீன் ஏற்றுமதியாளர்கள் வராததால் கடல் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. இதனால், மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உரிய விலை கிடைக்கும் வரை கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இருப்பு வைக்க குளிர்பதனக் கிடங்கு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ஏ.தாஜுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x