Last Updated : 14 Jun, 2020 03:13 PM

 

Published : 14 Jun 2020 03:13 PM
Last Updated : 14 Jun 2020 03:13 PM

புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச துணியா? பணமா? - மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச துணி தர அமைச்சரவை தரப்பில் கோப்பு அனுப்பிய சூழலில் பணமாக கடந்தாண்டை போல தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியதால் ஒருமித்த முடிவு ஏற்படாததால் இக்கோப்பை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரியில் ரேஷனில் அனைவருக்கும் இலவச சர்க்கரை மற்றும் பொருட்களும், ஏழைகளுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் இலவச துணி தரப்படும்.

புதுச்சேரியில் பல மாதங்களாக ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படவில்லை. அதேபோல் அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பணமும் 22 மாதங்கள் வரை பயனாளிகளுக்குத் தர வேண்டியுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் தொடர்வதால் பல நலத்திட்டங்களும் செயல்பாட்டில் இல்லை. இதனால் மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் அரசு ஆட்சி பொறுப்பேற்று ஐந்தாவது ஆண்டில் உள்ளது. அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளதால் வரும் தீபாவளிக்கு இலவச துணி தர திட்டமிட்டனர்.

இம்முறை தீபாவளிக்கு முன்கூட்டியே டெண்டர் விட்டு துணி தர திட்டமிட்டு கடந்த 3-ம் தேதி கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அரசு அனுப்பியது. ஆனால் துணைநிலை ஆளுநர் துணிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்த அறிவுறுத்தி முடிவுக்கு வராததால் இறுதி முடிவுக்காக கோப்பினை மத்திய அரசுக்கு கடந்த 9-ம் தேதி அனுப்பினார். இது ராஜ்நிவாஸ் வெளியிட்ட கோப்புகள் ஒப்புதல் பட்டியலின் மூலம் தெளிவாகியுள்ளது.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு துணி தருவதற்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் தர துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டு செயல்படுத்தினார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக தலா ரூ.1,000 ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தரப்பட்டது. ஆதி திராவிடர் இன 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.500-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச துணிக்கு பதிலாக நபர் ஒருவருக்கு தலா ரூ.500-ம் தரப்பட்டது. இதனால் துணி தர முடியாமல் போனது. இது ஏழைகள் மத்தியிலும் ஆதிதிராவிடர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனால் இம்முறை முன்கூட்டியே கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் பழைய முறைப்படி பணம் தர துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். மத்திய அரசு முடிவு படி அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x