Published : 14 Jun 2020 12:54 PM
Last Updated : 14 Jun 2020 12:54 PM

அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி; தொலைபேசி வாயிலாக உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

எம்எல்ஏ பழனி - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனியின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த கே. பழனி உள்ளார். இவர் ஊரடங்கு தொடங்கியது முதல் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மாநகராட்சி சுகாதார துறையினர் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் வீட்டின் அருகில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனிடையே எம்எல்ஏ பழனி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக பழனி பதவி வகித்து வருகிறார். ஊடரங்கு தொடங்கியது முதல் ஏராளமானோருக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தார் எம்எல்ஏ பழனி. அப்போது, அவருடன் ஏராளமான அதிமுகவினர், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். தற்போது அவருடன் பழகியவர்கள் கரோனா அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், எம்எல்ஏ பழனியின் உடல்நிலை குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 14) தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக, இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்தி வெளியீடு:

"தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி, கரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு, 12-ம் தேதி இரவு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன், அவரது மகன்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்ததுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம், கே.பழனிக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தினார்.

நேற்று அவரது மகன் பி. செல்வத்திடம் அவரது தந்தையின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார்.

இன்று காலை கே.பழனியின் மற்றொரு மகன் பி. வினோதத்திடம் அவரது தந்தையின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், இன்று காலை 10 மணியளவில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரிடம், உடல்நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது கே.பழனி தான் நலமாக இருப்பதாக தெரிவித்ததுடன், முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x