Published : 10 Sep 2015 08:50 AM
Last Updated : 10 Sep 2015 08:50 AM
நிலத்துக்காக முன்பணம் பெற்று ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வியும், அவரது மருமகனும் நேற்று பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம், பனையூர் பகுதியில் 4 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை விற்பனை செய்ய செல்வியும், ஜோதிமணியும் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த நிலத்தை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான நெடுமாறன் வாங்க முயற்சித்தார்.
ரூ.4.50 கோடி
அதற்காக அவர், செல்வி மற்றும் அவரது கணவர் ஜோதிமணி ஆகியோரிடம் கடந்த 2009-ம் ஆண்டு, முன்தொகையாக ரூ.4.50 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே முன் தொகை பெற்று போடப்பட்ட ஒப்பந்தப்படி அவரிடம் நிலத்தை விற்காமல் வேறு நபரிடம் நிலத்தை செல்வி தரப்பு விற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டபோது செல்வியும், ஜோதிமணியும் நிலத்தையும் கொடுக்காமல், முன்பணத்தையும் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
போலீஸில் புகார்
இதுகுறித்து, 2012-ல் நெடுமாறன், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஜோதிமணி மட்டுமே ஆஜராகி வந்தார். ஆனால், செல்வி ஆஜராகமாகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் செல்வி கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், நேற்று மாலை நடந்த வழக்கு விசாரணையில் செல்வி முதல் முறையாக ஆஜரானார். அவருடன் ஜோதிமணியும் ஆஜாரானார்.
வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிசா, விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT