வீட்டில் இருந்து கொண்டு அறிக்கை விடுவோருக்கு கரோனா வைரஸை அறிவதற்கும், புரிவதற்கும் வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்

வீட்டில் இருந்து கொண்டு அறிக்கை விடுவோருக்கு கரோனா வைரஸை அறிவதற்கும், புரிவதற்கும் வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Updated on
1 min read

"வீட்டில் இருந்து கொண்டு அறிக்கை விடுவோருக்கு ‘கரோனா’ வைரஸைப் பற்றி அறிவதற்கும், புரிவதற்கும் வாய்ப்பு இல்லை" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் ‘கரோனா’ வார்டுகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ப்ரியா ராஜ், டீன் சங்குமணி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜவின் பாட்ஷா, தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜாகோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு இந்த உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கி பேசியதாவது:

தற்போது நடக்கும் ‘கரோனா’ வைரஸ் தொற்று நோய் பாதிப்பு சாதாரண பேரிடர் இல்லை. உலகளாவிய பேரிடர். இதுவரை உலக யுத்தத்தில் கூட யாரும் இதுபோன்ற பேரிடரை சந்தித்தது இல்லை.

ஒரே நேரத்தில் ஒரு நொடிப்பொழுதில் ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கக்கூடிய கொடிய வைரஸ் ‘கரோனா’ வைரஸ். கடைசி வைரஸை ஒழிக்க வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான தொற்று பரிசோதனை உபகரணங்களை அரசு நிறைவாக வழங்கி வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் சேவை உள்ளத்தோடு பணிபுரியும் மருத்துவக்குழுவினர் இருக்கும் வரை தமிழகத்தில்

எத்தனை ‘கரோனா’ வைரஸ்கள் வந்தாலும் அவை தகர்த்து எரியப்படும். வீட்டில் இருந்து கொண்டு அறிக்கை விடுவோருக்கு அதை அறிவதற்கும், புரிவதற்கும் வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in