Published : 13 Jun 2020 07:00 AM
Last Updated : 13 Jun 2020 07:00 AM

காதல் திருமணத்துக்கு உதவிய இளைஞர் கொலையில் திருமங்கலம் அதிமுக செயலரை தேடும் போலீஸ்

மதுரை

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர அதிமுக செயலர் விஜயன். இவரது மகள் ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கு மதுரை பிபி.குளத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28) உதவினார். இதனால் இவருக்கும், விஜயனுக் கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் மணிகண்டன் கடந்த 7-ம் தேதி திருமங்கலத்தில் உள்ள தனது அத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, செக்கானூரணி அருகே கொலை செய்யப்பட்டார்.

மணிகண்டன் மனைவி தீபிகா கொடுத்த புகாரின்பேரில், செக் கானூரணி போலீஸார் திருமங் கலத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரகாஷ், விஜயன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

சக்திவேல் கைது செய்யப் பட்டார். தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பிரகாஷ் சரண் அடைந்தார். தலைமறைவான அதிமுக நகரச் செயலர் விஜயனை காவல் ஆய்வாளர் அனிதா தலைமையிலான தனிப்படையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில், விஜயனை உடனே கைது செய்யக் கோரி மணிகண்டன் குடும் பத்தினர் மற்றும் மருதுசேனை இயக்க நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் தலைமையில் திருமங்கலத்தில் தேவர் திடல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மருதுசேனை இயக்க நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கூறுகையில், மணிகண்டன் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்தும், அதிமுக நகரச் செயலர் விஜயனை இதுவரை பதவி நீக்கவில்லை. அவரையும், அவருக்கு அடைக்கலம் தரும் அமைச்சரையும் பதவி நீக்க வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.

மணிகண்டன் கொலை குறித்து விசாரிக்கும் அதிகாரி கூறுகையில், தலைமறைவாக இருக்கும் விஜயனை தேடிவருகிறோம். பிரகாஷ் என்பவரை போலீஸ் காவலில் எடுத்து கொலைக் கான முகாந்திரம், யாருக்கெல் லாம் தொடர்பு என்பது குறித்து விசாரிக்கப்படும். இதன் அடிப் படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x