Published : 13 Jun 2020 06:44 AM
Last Updated : 13 Jun 2020 06:44 AM

ஸ்டேட் வங்கியில் பணிக்குச் சேர இளம்பெண்ணுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சென்னை

ஸ்டேட் வங்கியில் பணிக்குச் சேர இளம்பெண்ணுக்கு பழங் குடியினர் சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்டம் சின்னகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த மகேந் திரன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘ நாங்கள் பழங்குடியினர் பிரிவில் குறிச்சான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கும், எனது ஒரே மகள் மற்றும் 2 மகன்களுக்கு பழங்குடியினர் பிரிவு சான்றிதழ் கோரி தருமபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்தோம். ஆனால் அவர் நிராகரித்தார்.

இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அளவிலான பரிசீலனைக்குழுவிடம் மனுவை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன்படி சான்றிதழ் கோரி மாநில அளவிலான சரிபார்ப்பு குழுவில் விண்ணப்பித்தேன். அந்தக்குழுவும் பரிசீலித்து நாங்கள் பழங்குடியினர் பிரிவில் குறிஞ்சான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உரிய சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தது. ஆனால் இதுவரை வருவாய் கோட்டாட்சியர் சான்றிதழ் வழங்கவில்லை. தற்போது எனது மகள் சந்தியாவுக்கு ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தும் உரிய சாதிச்சான்றிதழ் இல்லாததால் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கும், எனது மகள் மற்றும் மகன்களுக்கு உரிய பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர், இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் தொடர்புடைய அதிகாரிக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும், என எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி இந்த சாதிச்சான்றிதழுக்காக மனுதாரர் கடந்த 2012 முதல் போராடி வருவதாகவும், இதுவரை 3 முறை உயர் நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் வாதிட்டார்.

அப்போது அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘‘ தருமபுரி வருவாய் கோட்டாட்சியராக பதவி வகித்த தேன்மொழி மாறுதலாகி அவருக்குப்பதிலாக தணிகாச்சலம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் வேண்டும், எனவும் கோரினார்.

ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதிகள், ‘‘சாதிச்சான்றிதழ் வழங்க மறுத்த வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த தொகையை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த உத்தரவிட்டனர்.

தற்போதைய வருவாய் கோட்டாட்சியர் தணிகாச்சலம், மனுதாரர் களுக்கு உடனடியாக நாளை (இன்று) சாதிச்சான்றிதழ் வழங்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 15-க்கு தள்ளிவைத்து அன்றைய தினம் 2 அதிகாரிகளும் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x