Published : 13 Jun 2020 06:35 AM
Last Updated : 13 Jun 2020 06:35 AM

குறைந்த கட்டணத்தில் ஒரே வயரில் இணையதளம், டிவி, செல்போன் சேவை- புதுச்சேரியில் வழங்க திட்டம்

அதிக வேகத்தில் ஒரே கம்பியின் வழியே(டெலிகாம் வயர்) இணையதளம், தொலைக்காட்சி கேபிள், செல்போன் நெட்வொர்க் ஆகிய வற்றுக்கான இணைப்பை வழங்க புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத் துறை திட்ட மிட்டுள்ளது.

பிப்டிக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ‘பாண்டிச்சேரி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ (பெலிகான்) நிறுவனத்தின் மூலம் இந்தச் சேவையை மக்களுக்கு அளிப் பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வக்பு வாரிய அலு வலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்டு கருத்துகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், பிப்டிக் தலைவர் சிவா எம்எல்ஏ, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சவும்யா, இயக்குநர் ஒய்.எல்.என்.ரெட்டி, பிப்டிக் மேலாண் இயக்குநர் சத்யமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடர்பாக பிப்டிக் தலைவர் சிவா எம்எல்ஏ கூறியது:

பிப்டிக்கின் கீழ் செயல்படும் பெலிகான் நிறுவனம் மாநில தேர்தல் ஆணையத்தின் கணினிமயமாக்கலுக்கான அனைத்து தீர்வுகளையும் வழங்க நோடல் ஏஜென்சியாக நியமிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளியில் கணினி கல்வித் திட்டத்துக்கும் நோடல் ஏஜென்சியாக உள்ளது. எனவே ஒரே வயரில் இணையதளம், செல்போன், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான இணைப்பை வழங்கும் இப்பணியை பெலிகான் நிறுவனத்துக்கு வழங்கினால், சிறப்பாக மேற்கொண்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகளை கிடைக்கச் செய்யலாம்.

இதன் மூலம் புதுச்சேரி அரசு இதுவரை நினைத்துப் பார்த்திராத வருவாயை ஈட்ட முடியும். இப்போது வாங்கும் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே வாங்கிக் கொண்டு, தற்போது அளிக்கும் சேவையை விட கூடுதலான சேவையை வழங்க முடியும் என்று தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x