

‘‘எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எந்த விஷயத்தை பாராட்ட வேண்டும் எந்த விஷயத்தை எதிர்க்க வேண்டும் என தெரியாமல் இருக்கிறார். ஏன் என்றால் அவருக்கு இருப்பது சொந்த மூளை அல்ல வாடகை மூளை அது தான் அப்படி பேசுகிறார், ’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை வில்லாபுரம், தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, காய்கறி, பலசரக்கு பொருள்கள் அடங்கிய பைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்,
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் பயிர்க்கடன் இல்லை என்ற நிலையே வராது, இந்த வருடம் விவசாய பயிர்க்கடன் 11 ஆயிரம் கோடி வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2562 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் பயிர் கடன் வாங்கிய 85 சதவிகித விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி உள்ளார்கள். ஸ்டாலின் ஒன்றினைவோம் வா திட்டத்தினை நிறைவேற்றுகிறோம் என கூறிய ஸ்டாலின் வீட்டிலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி பாதுகாப்பாக இருந்து விட்டார், களப்பணி ஆற்றிய எம்.எல்.ஏ.அன்பழகன் தான் மறைந்து விட்டார்.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எந்த விஷயத்தை பாராட்ட வேண்டும் எந்த விஷயத்தை எதிர்க்க வேண்டும் என தெரியாமல் இருக்கிறார் ஏன் என்றால் அவருக்கு இருப்பது சொந்த மூளை அல்ல வாடகை மூளை அது தான் அப்படி பேசுகிறார்.
சென்னையிலிருந்து மதுரைக்கு சாலை மார்க்கமாகவும் ரயில் மூலமாகவும் வரும் அனைவரும் பரிசோதிக்கப்படுகிறார்கள். நடிகர் கமல் தன்னுடைய கட்சியில் இருக்கும் 100 நிர்வாகிகளை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே அரசை பற்றி குறை கூறி பேசுகிறார்.
அரசை பற்றி குறை கூறி பேசினால் தான் டி.வி.யில் அவரை காண்பிப்பார்கள். கமல் என்ன எதிர்பார்க்கிறார் என தெரியவில்லை சினிமா சூட்டிங்கில் நடிப்பது போல கட்டி பிடி வைத்தியம் செய்வதை எதிர்பார்க்கிறாரா ? கமல் கூறுவதை போல அரசிடம் ஒரு சதவிகித குறை கூட இல்லை. அரசை குறை கூற கமலுக்கு யோக்கிதை இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.