

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாகர்கோவில் இருளப்பபுரத்தில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்தில் விதிமுறையை மீறி 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமையில் அதிகாரிகள் சென்று மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இந்த திருமணத்தில் ஊரடங்கை மதிக்காமல் பங்கேற்றதாக 202 பேர் மீது கோட்டாறு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் திருமணத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாததை தொடர்ந்து மணப்பெண், மற்றும் திருமணத்தில் பங்கேற்ற 31 பேருக்கு சளி, மற்றும் ரத்த மாதிரியை எடுத்து சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
குமரி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமுறையை மதிக்காமல் திருமணம், மற்றும் ஆடம்பர விழாக்களை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.