Published : 11 Jun 2020 06:26 PM
Last Updated : 11 Jun 2020 06:26 PM

திடீரென கடைகள் இடிப்பு; வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள்!

கோவையில் மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் டி.கே.மார்க்கெட் பகுதியில் உள்ள 80க்கும் மேற்பட்ட காய்கனிக் கடைகள் இடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையின் முக்கியமான வர்த்தகப் பகுதியான டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் டி.கே.மார்க்கெட் மிகவும் பெயர் பெற்றது, பழமையானதும்கூட. ஓரிரு ஏக்கர் பரப்பளவே கொண்ட இந்த மார்க்கெட்டில் மளிகைக் கடைகள், காய்கனிக் கடைகள் என 450க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கோவை மாநகரப் பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, மாவட்டத்தின் கிராமப்புறங்களிலிருந்தும் சில்லறை வியாபாரிகள் இங்கு மொத்த விலைக்குப் பொருட்களை வாங்கிச் செல்வார்கள். கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 மாதங்களுக்கு மேலாக இங்குள்ள கடைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன.

பல்வேறு தொழில் மற்றும் வியாபாரத்திற்கு பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், டி.கே.மார்க்கெட் பகுதியில் மட்டும் கடைகளைத் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதற்கிடையே, ஏற்கெனவே இருந்த பல கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அந்தக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் சில அமைப்புகள் கோரின.

அதே நேரத்தில், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் கடைகள் வைத்துள்ளனர் என்றும் அவற்றைச் சரியாகப் பிரித்து தங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் கோரி வந்தனர்.

இதனால் இங்கே சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் உருவானது. இதனால் இங்கு உள்ள 50 கடைகளை மட்டுமே திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்தும், எல்லா கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மார்க்கெட் வியாபாரிகள் கடந்த 2-3 ஆம் தேதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

'குறிப்பிட்ட கடைகளை மட்டுமே செயல்பட அனுமதித்ததில் உள்நோக்கம் உள்ளது. இதனால் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 11) காலை டி.கே.மார்க்கெட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. தொடர்ந்து இங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இங்குள்ள 88 காய்கனிக் கடைகளை இடித்து அகற்றினர்.

"இந்தக் கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளன. இவை மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கும், மற்ற கடைகளுக்கும் இடையூறாக இருந்தன. தரைக் கடைகள் என்று அழைக்கப்படும் இந்த 88 நடைபாதைக் கடைகளை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படியே அப்புறப்படுத்துகிறோம்" என்று அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதுகுறித்து இங்கு கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் கூறுகையில், "கரோனா காலத்தில் தற்காலிகக் கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. இப்படியான சூழலில், இந்தக் கரோனா சமயம்தான் சரியான சமயம் என்று பார்த்து திடீரென்று அதிகாரிகள் கடைகளை இடித்துத் தள்ளிவிட்டனர். இதனால் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழக அரசு எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளுக்கு, கடைகளை நடத்த மாற்று இடமாவது ஒதுக்கித் தர வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x