Published : 11 Jun 2020 05:19 PM
Last Updated : 11 Jun 2020 05:19 PM

கரோனா வார்டில் 14 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்: தாயையும், சேயையும் காப்பாற்றி சாதித்த மதுரை அரசு மருத்துவர்கள் 

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை அரசு மருத்துவமனை ‘கரோனா’ வார்டில் கடந்த ஒரு மாதத்தில் நோய் பாதித்த 28 கர்ப்பிணி பெண்களை குணப்படுத்தியுள்ளனர்.

இதில், பிரசவம் நடந்த 14 கர்ப்பிணி பெண்களுக்கு நோய்த் தொற்றை குணப்படுத்தி அவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவாமல் தாயையும், சேயையும் காப்பாற்றி ‘கரோனா’ வார்டு மருத்துவக்குழுவினர் சாதித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது சென்னை மட்டுமில்லாது தென் தமிழகத்திலும் ‘கரோனா’ தொற்று வேகமாகப் பரவுகிறது. இந்த நெருக்கடியான காலத்தில் தொற்று அபாயத்தால் கர்ப்பிணி பெண்கள், மாதந்தோறும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற முடியவில்லை.

தனியார் மருத்துவமனைகளில் ‘கரோனா’ அபாயத்தில் சிகிச்சை வழங்குவதற்கு தயங்குகின்றனர். அதனால், கர்ப்பிணி பெண்கள் முழுக்க முழுக்க மகப்பேறு சிகிச்சைக்கு தற்போது அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் நிலை உள்ளது.

தென் தமிழகத்தில் ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ‘கரோனா’ வார்டு சிகிச்சை இருந்தாலும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் இருந்தாலும், ‘கரோனா’வால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்லாது சிக்கலான பிரசவத்திற்கும் கர்ப்பிணி பெண்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கே பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

அதனால், கடந்த மே மாதத்தில் மட்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,413 பிரசவங்கள் நடந்துள்ளன. மேலும், 3 மாதம் முதல் 7 மாதம் வரையிலான பல்வேறு மாத கர்ப்பிணி பெண்கள், மதுரை அரசு மருத்துவமனை ‘கரோனா’ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று நோய் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் மீண்டும் பிரசவத்திற்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு வர உள்ளனர்.

இதுகுறித்து ‘டீன்’ சங்குமணி கூறியதாவது: இந்த ‘கரோனா’ காலத்தில் தென் மாவட்டங்களில் இருந்து இந்த நோயால் பாதிக்கப்பட்ட அதிகமான கர்ப்பிணி பெண்கள், நிறைமாத கர்ப்பிணி பெண்கள்

மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

அதனால், அவர்களையும், அரவ்கள் குழந்தைகளையும் எந்த சிக்கலும் இல்லாமல் காப்பாற்ற ‘கரோனா’ வார்டில் மகப்பேறு சிகிச்சைக்காக 10 மகப்பேறு மருத்துவர்கள், 10 மயக்கவியல் நிபுணர்கள், பச்சிளங்குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர்.

கடந்த மே மாத்ததில் 1,413 பிரசவங்கள் நடந்துள்ளன. 903 பேருக்கு சுகப்பிரசவமும், 510 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமும் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில், ‘கரோனா’வால் பாதிக்கப்பட்ட 14 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. 13 கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை மூலமும், ஒருவருக்கு சுகப்பிரசவம் மூலமும் 5 ஆண் குழந்தைகள், 9 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு இந்த தொற்று பரவாமல் தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளோம்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாத கர்ப்பிணிகள் 14 பேருக்கு சிகிச்சை வழங்கி அந்த நோயை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரோனாவால் பாதித்த கர்ப்பிணி பெண்களையும், அவர்கள் குழந்தைகளையும் எந்த ஆபத்தும் நோய் தொற்றும் இல்லாமல் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிய ‘கரோனா’ வார்டு மருத்துவக்குழுவினரை ‘டீன்’ சங்குமணி பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x