

வட சென்னை அனல் மின் நிலையத்தில் பணியின்போது நடந்த விபத்தில் பலியான ஒப்பந்த தொழிலாளர் பாபு குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 1-ல் ஒப்பந்த தொழிலாளராகப் பணி புரிந்து வந்த பொன்னேரி வட்டம், சீமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பாபு.
கடந்த 28.9.2015 அன்று மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கன்வேயர் பெல்ட் அறுந்ததால், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த பாபுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பாபுவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.