Published : 10 Jun 2020 10:16 PM
Last Updated : 10 Jun 2020 10:16 PM

EGMORE இனி EZHUMBOOR:  ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போலவே ஆங்கிலத்திலும் எழுத அரசாணை

தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செய்லபடுத்துதல் பற்றிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய பிரபல ஊர்களின் பெயர் தமிழ் உச்சரிப்புப்படி ஆங்கிலத்தில் எழுத உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு வருமாறு:

தமிழ் வளர்ச்சி - 2018--2019--ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செய்லபடுத்துதல் குறித்த கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:
பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-

“தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உதாரணமாக திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.”

2. மேற்படி அறிவிப்பினை செயலாக்கம் செய்வது தொடர்பாக, மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை தலைவராகக் கொண்ட உயர்நிலைக்குழுவும் மற்றும் துறை அமைச்சரை தலைவராக கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கடிதங்களில், மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையுடன் பெறப்பட்ட திருத்தம் செய்யப்பெற வேண்டிய ஊர்ப்பெயர்கள் அடங்கிய பட்டியல் மீது ஆலோசனைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது எனவும், மேலும், ஆலோசனைக்குழுக் கூட்டத்தின் முடிவிற்கிணங்க, முதல் கட்டமாக, தமிழ், ஆங்கில உச்சரிப்புகளில் முற்றிலுமாக வேறுபாடுடைய ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது என்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

4. மேற்படி ஆலோசனைக்குழு கூட்டத்தின் முடிவிற்கிணங்க மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பெற்ற ஊர்ப்பெயர்களும், தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டல் மாற்றம் செய்யப்பெற வேண்டிய ஊர்ப்பெயர்களும் உள்ளடக்கிய 1018 ஊர் பெயர்களை பட்டியலிட்டு மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்துடன் தமிழ் வளர்ச்சி இயக்குநர் இணைத்தனுப்பி அரசாணை வெளியிடுமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

அறிவிக்கப்பட்ட, “தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல்” என்ற அறிவிப்பினை செயற்படுத்துதல் தொடர்பாக ஆலோசனைக்குழு கூட்டத்தின் முடிவிற்கிணங்க மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பெற்ற ஊர்ப்பெயர்களும், தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டல் மாற்றம் செய்யப்பெற வேண்டிய ஊர்ப்பெயர்களும் உள்ளடக்கிய தமிழ் வளர்ச்சி இயக்குநர் முதற்கட்டமாக அளித்துள்ள இணைப்பில் உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 1018 (ஆயிரத்து பதினெட்டு) ஊர்ப்பெயர்களின் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து கீழ்க்கண்ட அறிவுறுத்தங்களுடன் அரசு
ஆணையிடுகிறது:-

(1) உயர்நிலைக் குழுவில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, மாநில அளவில் அமைச்சர் (தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு) அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை குழுவால் ஏற்பளிக்கப்பட்டு, இணைப்பில் அளிக்கப்பட்டுள்ள ஊர்ப்பெயர்கள் மாற்றம் செய்வது தொடர்பாக உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களை அறிவுறுத்துமாறு வருவாய் துறையைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆளுகைக்குள் வரும் ஊர்ப் பெயர்களின் மாற்றம் செய்வது தொடர்பாக உரிய மேல் நடவடிக்கை / தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வாறே நகராட்சி, மாநகராட்சி துறை ஆளுகைக்குள் வரும் ஊர்ப் பெயர்களில் மாற்றம் செய்வது தொடர்பாக உரிய மேல் நடவடிக்கை / தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இப்பணியைத் துரிதமாக மேற்கொள்ள மேற்குறிப்பிட்ட துறைகளுடன் இணைந்து செயற்பட அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சி இணை / துணை / உதவி இயக்குநர்களை அறிவுறுத்துமாறு தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதில் மாற்றப்பட உள்ள சில ஊர்களின் பெயர்கள்.

தண்டையார் பேட்டை ஆங்கிலத்தில் TONDIYARPET என இதுவரை எழுதப்பட்டது இனி THANDAIYAARPETTAI என எழுதப்படலாம்.

புரசைவாக்கம் இதுவரை ஆங்கிலத்தில் PURASAWALKAM என எழுதப்பட்டு வந்தது இனி PURASAIVAAKKAM என எழுதப்படவேண்டும்

வேப்பேரி இதுவரை VEPERY என எழுதப்பட்டது இனி VEPPERI என எழுதப்படவேண்டும்.

வ உ சி நகர் இதுவரை V.O.C. NAGAR என எழுதப்பட்டது இனி VA. OO. SI. NAGAR என எழுதப்படவேண்டும்.

பெரம்பூர் இதுவரை PERAMBUR என எழுதப்பட்டு வந்தது இனி PERAMBOOR என எழுதபடவேண்டும்.

அய்னாவரம் இதுவரை AYANAVARAM என எழுதப்பட்டு வந்தது இனி AYANPURAM என எழுதப்படவேண்டும்.

அமைந்தக்கரை இதுவரை AMINJIKARAI என எழுதப்பட்டு வந்தது இனி AMAINDHAKARAI என எழுதப்படவேண்டும்.

எழும்பூர் இதுவரை EGMORE என எழுதப்பட்டு வந்தது இனி EZHUMBOOR என எழுதப்படவேண்டும்.

சிந்தாதிரிப்பேட்டை இதுவரை CHINTADRIPET என எழுதப்பட்டு வந்தது, இனி CHINTHADHARIPETTAI என எழுதப்படவேண்டும்.

திருவல்லிக்கேணி இதுவரை TRIPLICANE என எழுதப்பட்டு வந்தது, இனி THIRUVALLIKKENI என எழுதப்படவேண்டும்.

மயிலாப்பூர் இதுவரை MYLAPORE என எழுதப்பட்டு வந்தது இனி MAYILAAPPOOR என எழுதப்பட வேண்டும்.

சைதாப்பேட்டை இதுவரை SAIDAPET என எழுதப்பட்டு வந்தது இனி SAITHAAPPETTAI என எழுதப்பட வேண்டும்.

ஆலந்தூர் இதுவரை ALANDUR என எழுதப்பட்டு வந்தது இனி AALANDHOOR என எழுதப்பட வேண்டும்.

அடையாறு இதுவரை ADAYAR என எழுதப்பட்டு வந்தது இனி ADAIYAARU என எழுதப்பட வேண்டும்.

தருமபுரி இதுவரை DHARUMAPURI என எழுதப்பட்டு வந்தது இனி THARUMAPURI என எழுதப்பட வேண்டும்.

தூத்துக்குடி இதுவரை TUTICORIN என எழுதப்பட்டு வந்தது இனி THOOTHTHUKKUDI என எழுதப்பட வேண்டும்.

இவ்வாறு 1018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x