Published : 10 Jun 2020 09:01 PM
Last Updated : 10 Jun 2020 09:01 PM

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 1000 ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “ஒரு குடும்பத்தைச் சமாளிக்க 1000 ரூபாய் போதுமானதாக இல்லை. அரசு அறிவித்த நிவாரணத் தொகை அமைப்புசாரா தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. பொங்கல் திருவிழாவின் போது கூட ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பான் 20 சதவீதமும், அமெரிக்கா 15 சதவீதமும் நிவாரணமாக வழங்குகிறது. இந்தியாவில், ஜிடிபியில் ஒரு சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளது. தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்துக் கொண்டிருக்ககூடிய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது . அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஏற்கெனவே தமிழக அரசு போதிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இதுபோன்ற வழக்குகள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதிகள், வழக்கு குறித்துப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x