Last Updated : 10 Jun, 2020 06:14 PM

 

Published : 10 Jun 2020 06:14 PM
Last Updated : 10 Jun 2020 06:14 PM

ஆலயங்களை திறக்கக் கோரி ஒற்றைக்காலில் நின்று இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயம் முன்பு ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர். படம்: எல்.பாலச்சந்தர்.

ராமநாதபுரம் 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலயங்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் 14 இடங்களில் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆலயங்களை திறக்க தமிழக அரசு தொடர்ந்து தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தோப்புக்கரண போராட்டங்களை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புல்லாணி, ராமேசுவரம், உச்சிப்புளி, மண்டபம், தொண்டி, சாயல்குடி உள்ளிட்ட 14 இடங்களில் ஆலயங்களை திறக்கக் கோரி, இந்து முன்னணி அமைப்பினர் ஆலயங்கள் முன்பு ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயம் முன்பு இந்து முன்னணியின் ராமநாதபுரம் நகர் தலைவர் பாலமுருகன், நிர்வாகி காசி உள்ளிட்ட 3 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயில் முன்பு ஒன்றியப் பொறுப்பாளர் சுரேஷ்பாபு தலைமையிலும், உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி கோயில் முன்பு பாரதிகுமார் தலைமையிலும் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x