Published : 10 Jun 2020 02:32 PM
Last Updated : 10 Jun 2020 02:32 PM

ஆன்லைன் கல்வி சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது: கோவில்பட்டியில் காங்கிரஸார் நூதன போராட்டம்

தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் படத்தை தடைசெய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி

தனியார் பள்ளிகளில் நடைபெற்றுவரும் ஆன்லைன் கல்வி சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானது எனக் கூறி அதை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஷ் குமார், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் இன்று காலை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திருவோடு ஏந்தி வந்தனர்.

அவர்கள் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசின் சமச்சீர் கல்விக்கு எதிராக தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் பாடம் நடத்துவதை தடை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கிய மனுவில், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தி வருகின்றன.

ஆனால் இவர்கள் கற்கும் கல்வியை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கற்பதற்கு சுமார் 6 மாத காலம் ஆகிவிடும். இது அரசின் சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானது. இந்த கல்விமுறை சமச்சீர் அற்ற நிலையை உருவாக்கும். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், ஆன்லைனில் கல்வி கற்க அதிக நேரம் மாணவர்கள் செல்போன் அல்லது மடிக்கணினியில் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு அதிக மன அழுத்தமும்‌, உடல் சோர்வும் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதேபோல் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் கல்வி கற்கும் நிலை உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இது மன அழுத்தத்தை உருவாக்கி உள்ளது. எனவே ஆன்லைன் கல்வி முறையை தடை செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x