Published : 10 Jun 2020 01:19 PM
Last Updated : 10 Jun 2020 01:19 PM

பொதுமுடக்கத்திலும் கடன் வசூலிப்பா?- நிதி நிறுவன ஊழியர்களைச் சிறைபிடித்த சத்தியமங்கலம் மக்கள்

சத்தியமங்கலம் நடுப்பாளையம் கிராமத்தில் நடந்த பேச்சுவார்த்தை.

நுண்கடன் நிறுவனங்கள் (மைக்ரோ ஃபைனான்ஸ்) உள்ளிட்ட எந்த நிதி நிறுவனமும், வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்களுக்குக் கடன் தவணையை வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இந்த உத்தரவைப் பல நிதி நிறுவனங்கள் அலட்சியப்படுத்தி நேரடி தவணை வசூலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நுண்கடன் நிறுவனங்கள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

கரோனா பொதுமுடக்கம் கடுமையாக அமல்படுத்தப்பட்ட சமயத்தில், கடன் தவணையை வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்ததால், தவணையை வசூலிப்பதில் இந்நிறுவனங்கள் தயக்கம் காட்டின. தற்போது பொதுமுடக்கத்தில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், இந்நிறுவனங்கள் மக்களை வதைக்கத் தொடங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதையடுத்து, சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி, காவல்துறை முன்னிலையில் இந்த நிதி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டனர். இதற்கிடையில், சத்தியமங்கலம் செண்பகப்புதூர் ஊராட்சி, நடுப்பாளையம் கிராமத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது.

நுண்கடன் நிறுவனம் ஒன்றிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கிய ஞானவேல் என்பவர், மாதந்தோறும் வட்டியுடன் அசலை திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். ஒரு லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில் இப்போதும் கடன் திருப்பித் தர நெருக்கடி கொடுத்திருக்கிறது அந்த நிதி நிறுவனம். மூன்று நாட்களுக்கு முன்னர் தவணையை வசூலிக்க ஞானவேலின் வீட்டுக்கு நிதி நிறுவனப் பிரதிநிதி சென்றிருந்த நிலையில் ஞானவேலின் மனைவிக்கும் நிதி நிறுவனப் பிரதிநிதிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பணத்தை வசூலிக்கத் தன் குழுவினருடன் ஞானவேலின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் நிதி நிறுவனப் பிரதிநிதி. இதில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் அணி திரண்டு நிதி நிறுவன ஊழியர்களைச் சிறைபிடித்தனர். தகவல் அறிந்த முன்னாள் எம்எல்ஏவான பி.எல்.சுந்தரம், சமூக ஆர்வலர் சுடர் நடராஜன் ஆகியோர் வந்து விசாரித்து இருதரப்பையும் சமாதானப்படுத்தி, நிதிநிறுவன ஊழியர்களை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நுண்கடன் நிறுவனத்தினர்- பொதுமக்கள் - காவல்துறை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இறுதியில், கரோனா பொதுமுடக்கம் முடிந்து முறையாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வரும் வரை கடன் வசூலில் இறங்க மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுத்துச் சென்றுள்ளனர் நுண்கடன் நிறுவனத்தினர்.

இதுகுறித்து இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சுடர் நடராஜன் கூறும்போது, “சத்தியமங்கலத்தில் இதுபோன்ற நுண்கடன் நிறுவனங்கள் நிறைய உள்ளன. இவர்கள் குறிவைத்துக் கடன் கொடுப்பதே பெண்கள் சுய உதவிக் குழுவினரிடம்தான். இந்தக் குழுவினை ஒருங்கிணைப்பதாகச் சொல்லும் தன்னார்வலர்களும் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்கள். ஊருக்குள் வரும் நுண்கடன் நிறுவனங்கள் குறைந்தது ஐந்து பெண்களைச் சேர்த்து ஒரு குழு என்று பெயர் சூட்டி அதற்கு ரூ.2 லட்சம் எனக் கடன் வழங்குகின்றன.

அவர்களிடம் அடுத்த வாரம் முதலே நேரில் வந்து கடன், வட்டி வசூலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் பல குழுக்களாக இருந்து பல நிறுவனங்களிடம் கடன் வாங்கி கட்ட முடியாத நிலை நீடிக்கிறது. இப்படி மட்டும் சத்தியமங்கலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளார்கள். இவர்கள் நிலை பரிதாபகரமானது. சாதாரண நாட்களிலேயே அப்படி என்றால் இப்போது கரோனா காலம் எப்படியிருக்கும்?

இந்தச் சூழ்நிலையிலும் வந்து வசூலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுதான் பொதுமக்கள் ஆத்திரப்பட்டு அவர்களைச் சிறைப்பிடித்திருக்கிறார்கள். நிதி நிறுவனப் பிரதிநிதிகளோ, ‘நாங்க அவங்ககிட்ட கடன் வசூலிக்க வரலை. இப்படி கடன் இருக்கு. இதைச் சேர்த்து வச்சீங்கன்னா வட்டிக்கு வட்டி கூடி உங்களுக்குத்தான் சுமை. அதனால முடிஞ்சவங்க முடிஞ்சவரை கட்டிடுங்கன்னு விழிப்புணர்வு ஊட்டவே வந்தோம்’ என்கிறார்கள். அப்படி எல்லாம் நீங்கள் விழிப்புணர்வு ஊட்ட வேண்டாம். சட்டப்படி எப்போது வசூலிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி சொல்கிறதோ அப்போது வந்தால் போதும் என்று அனுப்பிவைத்தோம்.

இதே விஷயத்தைத்தான் போலீஸார் முன்னிலையில் வைத்துப் பேசினோம். எனினும், இப்போது நாங்கள் பேசியிருப்பது சத்தியமங்கலத்திற்கு மட்டும்தான் பொருந்தும். ஈரோடு மாவட்டம் முழுக்க இந்தப் பிரச்சினை இருக்கிறது. இப்படியான நிறுவனங்களுக்கு மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களே எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அப்படி அறிவிப்பு செய்யவில்லை. ஆட்சியர் தலையிட்டால்தான் இந்தப் பிரச்சினை அடங்கும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x