Published : 09 Jun 2020 03:47 PM
Last Updated : 09 Jun 2020 03:47 PM

பொதுத்தேர்வுகள் ரத்து: மேல்நிலை வகுப்புகளின் மாணவர் சேர்க்கையில் எந்தக் குழப்பமும் ஏற்படாது; தமிழக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளும், 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இரு வகுப்புகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்; 11-ம் வகுப்புக்கு ஒரே ஒரு பாடத்திற்கு மட்டும் தேர்வு நடத்தப்பட வேண்டியிருந்த நிலையில் அதை ரத்து செய்து விட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை நேற்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

அடுத்த சில மாதங்களில் கரோனா பாதிப்பு அதிகமாகும் என்று தமிழக அரசே எச்சரித்திருந்த நிலையில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு அனைவருக்கும் தேர்ச்சியளிக்க வேண்டும் என்று இன்று காலை தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துத் தேர்வுகளும் ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆபத்தான சூழலில் தேர்வு எழுத வேண்டுமா? என அஞ்சிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்திருக்கிறது. பாமக கோரிக்கையை ஏற்று இம்முடிவை எடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவால் அனைவரும் பயனடைவார்களே தவிர, யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதால் மேல்நிலை வகுப்புகளின் மாணவர் சேர்க்கையில் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

இனி வரும் காலங்களில் பத்தாம் வகுப்புத் தகுதியின் அடிப்படையில் பணிக்குச் செல்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. தமிழக அரசின் முடிவு அனைவருக்கும் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வராமல் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இனிவரும் வகுப்புகளில் அவர்கள் சிறப்பாகப் படித்து சாதனைகளைப் படைப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x