

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா பெரும் பாதிப்பு உள்ள தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்தக் கூடாது என்ற திமுக தலைமையிலான அறப்போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மதிமுக தொண்டர்கள் பங்கேற்குமாறு, மாவட்டக் செயலாளர்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
'ஒன்பதரை லட்சம் மாணவர்கள், மூன்று லட்சம் ஆசிரியர்கள் உயிரோடு விளையாட வேண்டாம். தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் அபாயத்தை ஏற்படுத்தாதீர்கள்' என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உணர்ச்சியோடும், உருக்கத்தோடும் நீதிமன்றத்திலேயே கூறி இருக்கிறார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு, கண் கெட்ட பிறகு சூரிய வழிபாட்டுக்குத் தயாராகாமல், தான் எடுத்த முடிவு என்ற ஆணவத்திற்கும், அகந்தைக்கும் இடம் கொடுக்காமல் மக்கள் நலனே ஆட்சியின் இலக்கு என்ற உணர்வோடு, 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 10 ஆம் வகுப்புக்கானப் பொதுத் தேர்வை உடனடியாக ரத்துச் செய்து, அறிவிக்க வேண்டும்.
திமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், கூட்டணி தலைமை எடுத்த முடிவின்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, தொண்டர்கள் கையில் மதிமுக கொடிகளேடும், கருப்புக் கொடிகளோடும், நாளை 10 ஆம் தேதி காலை 10 மணி அளவில், ஆர்ப்பாட்டப் போர் முழக்கம் எழுப்ப அன்புடன் வேண்டுகிறேன்"
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.