Published : 09 Jun 2020 06:42 AM
Last Updated : 09 Jun 2020 06:42 AM

கரோனா ஊரடங்கு எதிரொலி: புதிய வாகனங்களின் பதிவு 75 சதவீதம் சரிவு; வெறிச்சோடி காணப்படும் ஆர்டிஓ அலுவலகங்கள்

கரோனா ஊரடங்கால் வாகனங்களின் விற்பனை முடங்கியுள்ள நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) எப்போதும் இல்லாத அளவுக்கு வாகனங்களில் பதிவு செய்வது 75 சதவீதம் குறைந்துள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கால் மற்ற தொழில்களைவிட ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. புதிய வாகனங்கள் வாங்குவது குறைந்து வருவதால், ஆர்டிஓ.களில் வாகன பதிவு எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

இதுதொடர்பாக வாகன விற்பனையாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்குக்கு முன்பிருந்தே ஆட்டோமொபைல் துறை நெருக்கடியை சந்தித்து வருகிறது. பிஎஸ்-4 வகை வாகனங்கள் பதிவு நிறுத்தம் உள்ளிட்டவை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தின. இதற்கிடையே, கரோனா ஊரடங்கால் மக்களின் புதிய வாகனங்கள் வாங்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது. மற்றொருபுறம் வாகன உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளது’’ என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக மே 18-ம் தேதிக்குப் பிறகுதான் வாகன பதிவு தொடங்கியது. கடந்த ஆண்டு மே மாதம் 1 லட்சத்து 60,748 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில் 32,840 வாகனங்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. புதிய வாகனம் வாங்குவது குறைந்ததால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்கள் பதிவு செய்வதும் 75 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதேபோல், புதியதாக பர்மிட் வாங்குவது, ஓட்டுநர் உரிமம் பெறுவது உள்ளிட்டவையும் கணிசமாகக் குறைந்துள்ளன. இதனால், வட்டாரப் போக்குவரத்து மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய மொத்த வருவாயில் 70 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x