

கரோனா பாதிப்பில் இறந்த சென்னையைச் சேர்ந்தவரின் சடலம் சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நால்வர், ஆம்புலன்ஸில் இருந்து உடலைத் தூக்கி வந்தனர். அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த குழி அருகே வந்தனர். அப்போது குழிக்குள் சடலத்தைக் கயிறு கட்டி இறக்காமல் தள்ளிவிட்டது போல் திரும்பினர்.
கரோனா தொற்று பாதித்தவரின் உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி செல்வதாக வீடியோக்கள் இணையத்தில் பரவின.
தொடர்ந்து இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இதுன தொடர்பாக விளக்கம் கேட்டு, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி இன்று (ஜூன் 8) கூறுகையில், "சவக்குழியில் உடல் வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உள்ளாட்சித்துறை ஊழியர்கள் இருவர், சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் என மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அறிக்கை வந்த பிறகு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உடல் நல்லடக்கத்தில் அவமரியாதை நிகழ்ந்தது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்தார்.