நெல்லை வள்ளியூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் மரணம்: 10-ம் வகுப்பு தேர்வுக்கு அனுமதி சீட்டு வாங்கிச் சென்ற மாணவி பலத்த காயம்

நெல்லை வள்ளியூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் மரணம்: 10-ம் வகுப்பு தேர்வுக்கு அனுமதி சீட்டு வாங்கிச் சென்ற மாணவி பலத்த காயம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 10-ம் வகுப்பு தேர்வுக்கு அனுமதி சீட்டு வாங்கிவிட்டு திரும்பிய மாணவி உள்பட 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

வள்ளியூர் அருகே சிங்கநேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவரது சகோதரியின் மகள் காவ்யா (15) தளபதிசமுத்திரத்திலுள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார்.

பொதுத்தேர்வுக்கு நுழைவு சீட்டு வாங்குவதற்காக அவரை தனது மோட்டார் சைக்கிளில் கண்ணன் அழைத்து சென்றார். அவர்களுடன் கண்ணின் மகன் சபரிஷ் (9), மணிஷா (6) ஆகியோரையும் அழைத்து சென்றிருந்தார். தேர்வுக்கூட அனுமதி சீட்டை வாங்கிவிட்டு அவர்கள் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது பெருமளஞ்சி பகுதியில் திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் எதிரே வந்த காரும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாயின.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களில் கண்ணன், மணிஷா ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

மற்ற இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏர்வாடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in