Last Updated : 08 Jun, 2020 02:24 PM

 

Published : 08 Jun 2020 02:24 PM
Last Updated : 08 Jun 2020 02:24 PM

வழிபாட்டுத் தலங்களை திறக்கையில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளை அறிவிக்கக் கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறக்கையில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறை குறித்து உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தற்போது வரை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அரசு எவ்வித முடிவும் எடுக்காத நிலையில் இந்த மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் தலைக்கட்டுபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் விரைவில் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எவ்வித வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்படவில்லை.

வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டால், பூஜைகள், அன்னதானம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இத்தகைய சூழலில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படவில்லை எனில் கரோனா பாதிப்பு அதிக அளவில் பரவும் நிலை உருவாகும்.

ஆகவே, கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்ளே செல்பவர்கள் மாஸ்க்குகள், கையுறைகள் உள்ளிட்டவற்றை அணிவதையும், சானிடைசர்கள் பயன்படுத்துவதை உறுதிப் படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கையில், கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறை குறித்து உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், " தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தற்போது வரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கே ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வழிபாட்டுத் தலங்களை திறக்கையில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும். ஆனால், தற்போது வரை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அரசு எவ்வித முடிவும் எடுக்காத நிலையில் இந்த மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே தற்போது எவ்விதமான உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x