Published : 08 Jun 2020 01:45 PM
Last Updated : 08 Jun 2020 01:45 PM

மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது; 10-ம் வகுப்புத் தேர்வை ஜூலை 2-வது வாரத்தில் நடத்தலாமா? - அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஜூலை 2-வது வாரத்தில் நடத்தலாமா என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவச்சலம் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு வரும் ஜூன் 15-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தப் பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

மேலும், 8 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வையும், பொதுமுடக்கம் காரணமாக தேர்வு எழுத முடியாத 36 ஆயிரத்து 89 மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுத உள்ளனர்.

மேலும், இந்தத் தேர்வுக்கான பணிகளில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், 22 லட்சத்து 43 ஆயிரம் ஆசிரியரல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு பொதுத்தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

எனவே, வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற உள்ளதாக அறவிக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்தப் பொதுத் தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இன்று (ஜூன் 8) விசாரித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. கரோனா தொற்றுப் பரவல் குறைந்தபின் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்தலாம்" எனக் கருத்து தெரிவித்தனர். வரும் ஜூலை 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x