3 மாத வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்:வணிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பத்து ரூபாய் மருத்துவர்

படவிளக்கம்: மருத்துவர் கனகரத்தினம்.
படவிளக்கம்: மருத்துவர் கனகரத்தினம்.
Updated on
1 min read

பட்டுக்கோட்டையில் 91 வயதாகும் மருத்துவர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்களிடம், மூன்று மாத வாடகை தொகையான 4 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை தர வேண்டாம் எனக் கூறியதால், வணிகர்கள் நெழிந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியத்தெருவில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் கனகரத்தினம்(91),இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷா ஆகியோரும் மருத்துவராக உள்ளனர்.

கனகரத்தினத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த கடைகள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடைகளுக்கு வாடகை எப்படி கொடுப்பது என வியபாரிகள் கவலையுடன் இருந்தனர். ஊரடங்கால் வியபாரம் இல்லாத நிலையில், வியாபாரிகளால் எப்படி நமக்கு வாடகை தர முடியும் என்று நினைத்த கனகரத்தினம் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கும் நீங்கள் எனக்கு வாடகை தர வேண்டாம் என்று வியாபாரிகளிடம் தெரிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

இந்த கடைகளில் ஒரு மாதம் 1.40 லட்ச ரூபாய் வாடகை வரும். 3 மாதங்களுக்கும் வாடகையான 4.20 லட்சத்தை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்த மனிதநேய மருத்துவரை பட்டுக்கோட்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களும், வியாபாரிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் கனகரத்தினம் கூறியதாவது:

கரோனா ஊரங்கால் வியாபாரிகள் கஷ்டப்படும்போது அதை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய 3 மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம் என்று கூறினேன் என்றார்.

இதுகுறித்து வணிகர்கள் கூறியதாவது:

தன்னிடம் சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இன்று வரை 10 ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்குகிறார் மருத்துவர் கனகரத்தினம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அனைவரையும் உறவாக நினைத்து சிகிச்சையளிப்பார். இதுவரை 65 ஆயிரம் பிரசவம் பார்த்துள்ளார். அதில் பாதி சுயபிரசவம் தான்.

இந்தியா- சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்க, மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறியது. அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளார் மருத்துவர். நாட்டையும் மக்களையும் நேசிக்கக் கூடியவராக இருந்துள்ளார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். அப்படியாக எங்களுக்கு உதவியது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in