Published : 07 Jun 2020 01:22 PM
Last Updated : 07 Jun 2020 01:22 PM

அதிகரிக்கும் கரோனா தொற்று: கொத்தவால் சாவடி ஒருவாரம் மூடல் 

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மளிகை மொத்த வியாபாரப்பகுதியான கொத்தவால் சாவடி பகுதியை ஒருவாரம் மூட வியாபாரிகள் முடிவெடுத்து கடைகளை அடைத்துள்ளனர்.

சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றில் முன்னணி மண்டலமாக ராயபுரம் உள்ளதால் அந்த மண்டலத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவெடுத்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் அடங்கிய ஏழுகிணறு, கொத்தவால் சாவடி, மண்ணடி, உள்ளிட்ட பல பகுதிகள் மக்கள் நெருக்கமாக உள்ள பகுதிகள் ஆகும்.

கொத்தவால் சாவடி, ஏழுகிணறு பகுதிகள் மளிகை பொருட்களின் மொத்த வியாபாரம் நடக்கும் பகுதியாகும். ஏறத்தாழ 5000 கடைகள் உள்ள கொத்தவால் சாவடி ஏற்கெனவே ஒருநாள் விட்டு ஒருநாள் வண்ண அடிப்படையில் கடைகள் மூடி திறக்கப்பட்டு வந்தது. 7 நாட்கள் கடைகளை அடைப்பது சம்பந்தமாக தற்போது வியாபாரிகளாக முடிவு எடுத்துள்ளனர்.

ஏற்கெனவே ஒருவாரம் மூடிய நிலையில் மேலும் ஒருவாரம் கடை அடைப்பு நடந்துள்ளது. இப்பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் அதிகம் கூடும் பகுதியாகும். ஏற்கெனவே கோயம்பேடு காய்கறி சந்தை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்த நிலையில் அடுத்து பெரும்பாலானோர் கூடும் பகுதியான கொத்தவால் சாவடி மளிகை மொத்த வியாபாரப்பகுதி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

அத்யாவசியப்பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைப்பதற்காக கொத்தவால்சாவடியில் வியாபாரம் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று அதிகம் உள்ள பகுதியாக அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் மாறியுள்ளது. எனவே சென்னையின் நிலையை கருத்தில் கொண்டு கொத்தவால் சாவடி பகுதியை 7 நாட்கள் மூடுவதாக வியாபாரிகள் சங்கத்தினரே முடிவெடுத்து மூடியுள்ளனர்.

தமிழ்நாடு உணவு தானியச் செயலர் சந்திரசேகரன் அளித்த பேட்டி:

கோயம்பேடு உள்ளிட்ட இடங்களை சென்னையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ள பகுதி கொத்தவால்சாவடி பகுதி ஆகும். மளிகை சாமான்கள் மொத்தமாக விற்கப்படும் பகுதி கொத்தவால் சாவடி ஆகும். சென்னையில் அதிக நோய்த்தொற்றுள்ள பகுதியாக உள்ள பகுதியில் இப்பகுதியும் வருகிறது.

இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூற முடியாது. குறுகிய இடத்தில் நெரிசலான பகுதிகளில் மக்கள் வசிப்பது முக்கிய காரணமாக உள்ளது. கோயம்பேடு பகுதியில் நோய்த்தொற்று அதிகமானபோது மூடப்பட்டது. அதேப்போன்று அதிகம் வியாபாரிகள் கூடும் கொத்தவால் சாவடி பகுதிக்கு யாருடைய உத்தரவும் இல்லாமல் நாங்களே கடந்த மாதம் 7 நாடகள் விடுமுறைவிட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொத்தவால் சாவடிக்கு விடுமுறை விட்டால் மளிகை மொத்த வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x