Published : 07 Jun 2020 07:03 AM
Last Updated : 07 Jun 2020 07:03 AM

அடகுக் கடை உரிமையாளர் கடத்தி கொலை- பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது

வந்தவாசி அருகே நகை அடகுக் கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்ததாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பொட்டி நாயுடு தெருவில் வசிப்பவர் அசோகச் சக்கரவர்த்தி. இவர், தேசூர் கிராமத்தில் நகை அடகுக் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து காணவில்லை. காணாமல் போன அன்று தனது மனைவிநிர்மலா, நண்பர் சதீஷ் ஆகியோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் அனுப்பும் நபரிடம் முறையே ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1.5 லட்சம் கொடுத்து அனுப்புமாறு அசோகச் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

அதன்படி, அவர்கள் இருவரும் அந்த நபரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். பணம் கைமாறியதும் அசோகச் சக்கரவர்த்தியின் செல்போன் அணைக்கப்பட்டது. இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் தேசூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அசோகச் சக்ரவர்த்தியை கண்டுபிடிக்க டிஎஸ்பி தங்கராமன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பின்னர், தேசூர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், அசோகச் சக்கரவர்த்தி பயன்படுத்திய செல்போன் எண் ஆகியவற்றைக் கொண்டு தனிப்படை போலீஸார் விசாரணையை தொடங்கினர். அதன்மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மொளபப்பட்டு கிராமத்தில் வசிக்கும் பாஜக பிரமுகர் திருநாவுக்கரசு, தெள்ளார் கிராமத்தில்வசிக்கும் முருகன், கவியரசு ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைதுசெய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "உள்ளாட்சி தேர்தல் செலவுக்காக அசோகச் சக்கரவர்த்தியிடம் நகைகளை அடகு வைத்து திருநாவுக்கரசு பணம் பெற்றுள்ளார். அந்தநகைகளை மீட்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் அசோகச் சக்கரவர்த்தியை கடத்திச் சென்றுதிருநாவுக்கரசு உள்ளிட்ட மூவரும் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அகர கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளனர்.

மேலும், அவர்கள் 3 பேரும்அசோகச் சக்கரவர்த்தியிடமிருந்து நகை, அடகுக் கடை சாவியை பறித்துக்கொண்டு, கடையைத் திறந்து பணம், நகையை திருடியுள்ளனர். உடல் புதைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளரையும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அவர் அரசியல் செல்வாக்குடன் தலைமறைவாக உள்ளார்" என்றனர். அசோகச் சக்கரவர்த்தியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x