Published : 06 Jun 2020 08:36 PM
Last Updated : 06 Jun 2020 08:36 PM

ராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 1.5 டன் புள்ளி திமிங்கல சுறா

ராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதியில் 1.5 டன் கிலோ எடையுடைய ராட்சத புள்ளி புள்ளி திமிங்கல சுறா இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, திமிங்கலம், சுறா உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.

இவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலை ராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதி மீனவர்கள் கடலுக்குள் சென்று திரும்பிய போது பெரிய மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதைக் கண்டனர்.

அருகில் சென்று பார்த்தபோது, அது அரிய வகையான புள்ளி திமிங்கல சுறா என்பதும், அது இறந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இது குறித்து ராமநாதபுரம் வனத்துறை சரகர் சதீஷ் கூறியதாவது:

''அழிந்து வரும் அரிய வகை உயிரினமாக புள்ளி திமிங்கல சுறா (whale shark) உள்ளதால் உலகளவில் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புள்ளி திமிங்கல சுறா மனிதனுக்கு எவ்விதமான தீங்கும் செய்யாது. அதிகப்பட்சமாக 70 வயது வரையிலும் உயிர் வாழக்கூடியது.

ஆற்றங்கரையில் கரை ஒதுங்கிய புள்ளி திமிங்கலம் சுமார் 1.5 டன் கிலோ எடையும் 3.6 மீட்டர் சுற்றளவும், 6.3 மீட்டர் நீளமும் கொண்ட ஆணிணம் ஆகும். பாறையில் மோதி அடிபட்ட நிலையில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது, என்றார்.

பின்னர் கால்நடை மருத்துவர் நிஜாமுதினால் உடல் கூறு ஆய்வு செய்த பின்னர் அந்த புள்ளி திமிங்கல சுறா ஆற்றங்கரை கடற்கரையில் புதைக்கப்பட்டது.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x