Last Updated : 06 Jun, 2020 06:54 PM

 

Published : 06 Jun 2020 06:54 PM
Last Updated : 06 Jun 2020 06:54 PM

நல்ல மீன்பாடு, அதிக விலை: 3 மாதங்களுக்குப் பின் தொழில் தொடங்கிய தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

நல்ல மீன்கள் கிடைப்பதுடன், அதிக விலைக்கும் விற்கப்படுவதால் மூன்று மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்கும் தளமாகக் கொண்டு 240 விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகு மீனவர்கள் தங்களை கடலில் சில நாட்கள் தங்கி மீன்பிடிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 5-ம் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலமும் அமலுக்கு வந்ததால் 240 விசைப்படகுகளும் மூன்று மாதங்களாக கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்கு தினமும் பல கோடி ரூபாய் அளவுக்கு மீன்கள் பிடித்து வரப்படும். இந்த மீன்களை வாங்க கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் வருவார்கள்.

இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் தினமும் இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கைகளும் இல்லாமல் மீன்பிடித் துறைமுகம் முடங்கிக் கிடந்தது.

இந்நிலையில் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு முன்கூட்டியே தளர்த்தியதால் இம்மாதம் 1-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

மொத்தமுள்ள 240 விசைப்படகுகளில் தினமும் 120 படகுகள் என சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியுள்ளது.

மீனவர்களின் வலையில் பாறை, சீலா, ஊழி, வெள, நெத்திலி போன்ற பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கின்றன. ஒரளவுக்கு நல்ல மீன்பாடு இருப்பதாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறும்போது, ஒரு விசைப்படகு ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தால் ரூ.1.25 லட்சம் வரை செலாவாகும்.

எனவே, ரூ.2 லட்சம் அளவுக்கு மீன்கள் கிடைத்தால் தான் கட்டுப்படியாகும். தற்போது போதுமான மீன்கள் கிடைப்பதுடன், மீன்களுக்கு நல்ல விலையும் இருப்பதால் ஒரு படகில் வரும் மீன்கள் சராசரியாக ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனையாகின்றன. இதனால் மீனவர்களுக்கு ஒரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்றனர் அவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x