Published : 06 Jun 2020 03:23 PM
Last Updated : 06 Jun 2020 03:23 PM

மதுரையில் டாஸ்மாக் அலுவலக ஊழியருக்கு கரோனா: சக ஊழியர்கள் அச்சம்

மதுரை

மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் மூலம் மற்ற டாஸ்மாக் அலுவலர்களுக்கு ‘கரோனா’ பரவியிருக்கக்கூடுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

மதுரையில் இதுவரை ‘கரோனா’ சமூகப் பரவல் நிலையை அடையவில்லை. முன்பு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே ‘கரோனா’ வைரஸ் தொற்று வந்தது. மிக அபூர்வமாகவே சிலருக்கு யாரிடம் இருந்து வந்ததே என்று தெரியாமல் ‘கரோனா’ தொற்று ஏற்பட்டது.

தற்போது சென்னையில் இருந்து மதுரை வந்தவர்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் ‘கரோனா’ வைரஸ் உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் மதுரை வடக்கு டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு ‘கரோனா’ வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதனால், அவருடன் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியிருக்கிறதா? என்று அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ய உள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வடக்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரிந்த இளநிலை உதவியாளருக்கு ‘கரோனா’ வைரஸ் வந்துள்ளது. அவர் விளாச்சேரியை சேர்ந்தவர். அவர் அலுவலகப்பணிகளை மட்டுமே பார்ப்பார். அவருக்கும் டாஸ்மாக் குடோனுக்கும் சம்பந்தமில்லை. அதனால், டாஸ்மாக் கடைகளில் பணிபுரிவர்களுக்கு இந்த தொற்று பரவ வாய்ப்பே இல்லை. இளநிலை உதவியாளருக்கு குடியிருக்கும் பகுதியில் இருந்து பரவியிருக்கலாம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x