Last Updated : 06 Jun, 2020 01:09 PM

 

Published : 06 Jun 2020 01:09 PM
Last Updated : 06 Jun 2020 01:09 PM

வழக்கறிஞரை கூடை பின்னும் தொழிலாளியாக மாற்றிய கரோனா

கரோனா ஊரடங்கால் கூடை பின்னும் தொழிலாளியாக மாறிய வழக்கறிஞர் உத்தமகுமரன்.

தஞ்சாவூர்

கரோனா ஊரடங்கால், உலகம் முழுவதும் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வழக்கறிஞரை கூடை பின்னும் தொழிலாளியாக மாற்றியுள்ளது கரோனா. பேராவூரணியை சேர்ந்தவர் வழக்கறிஞர் உத்தமகுமரன் (34), பழங்குடி குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு சிரமங்களுக்கிடையில் படித்து வழக்கறிஞர் பணியாற்றி வந்தார்.

தனது பணிகளுக்கிடையே தமது இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக குறிஞ்சி இன எழுச்சிக் கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி அவர்களது மேம்பாட்டுக்காக தன்னால் இயன்ற பணிகளை செய்து வருகிறார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் உதவி செய்ய யாருமில்லாததால், தங்களது இனத்தின் பாரம்பரிய தொழிலான கூடை பின்னும் தொழிலை செய்து வருகிறார்.

இதுகுறித்து உத்தமகுமரன் கூறும்போது, "கரோனா ஊரடங்கால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டாலும் எங்களது இன மக்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளனர். எங்களது அடிப்படைத் தொழில் கூடை பின்னுவதும், அம்மிக்கல் கொத்துவதும்தான். கரோனா பயத்தால் கல் கொத்த யாரும் வீட்டில் அனுமதிப்பதில்லை, கூடை பின்னி, கூடைகளை முன்பெல்லாம் ஒவ்வொரு வாரமும் சந்தை நடைபெறும் ஊர்களுக்கு கொண்டு போய் விற்பனை செய்வோம்,

இப்பொழுது சந்தை இல்லாததால் பின்னிய கூடைகளை விற்பனை செய்ய முடியாததால், கூடை பின்னுவதையும் எங்கள் மக்கள் வீட்டில் பசியும் பட்டினியுமாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகள் நிவாரண உதவிகளை செய்துள்ளனர். எங்களது இன மக்களுக்கு உதவிக்கு கூட யாரை அணுகுவது என்ற விழிப்புணர்வு இல்லாததால் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

சட்டம் படித்த என்னால் கூட எந்த வேலையும் இல்லாததால் குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் ஆற்றுப்பகுதிக்கு சென்று ஈச்சங்கோரைகளை வெட்டி வந்து கூடை பின்னுகிறேன். பின்னப்பட்ட கூடைகளை விற்பனை செய்யவும் வழியில்லை, அவசியப்பட்டு யாராவது வீடு தேடிவந்து வாங்கினால்தான் உண்டு.

நான் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். தற்போது ஊரடங்கால் நீதிமன்ற வழக்குகள் ஏதும் இல்லாததால், அந்த தொழிலை நம்பியுள்ள என்னைப் போன்றோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது வழக்குகள் ஏதும் இல்லாத காரணத்தால், நான் கூடை முடையும் தொழில் ஈடுபட்டு வாழ்வாரத்தை கடத்தி வருகிறேன்.

அதே போல் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த அளவே உள்ள எங்களது இன மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x