Published : 06 Jun 2020 12:48 PM
Last Updated : 06 Jun 2020 12:48 PM

பேராவூரணி  அருகே விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள இரண்டாம்புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன் (30), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்களத்தைச் சேர்ந்த சுகன்யாவை (26) காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. குடும்பப் பிரச்சினையில் கடந்த ஒரு வருடமாக கோபித்துக்கொண்டு ஆர்.எஸ்.மங்களத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்துள்ளார் சுகன்யா.

குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்ட கதிரவன் மனமுடைந்து கடந்த 4-ம் தேதி, எலுமிச்சை சாதத்தில் விஷத்தைக் கலந்து இரண்டு குழநந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைகளையும், கதிரவனையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 5) பரிதாபமாக இறந்தனர்.

கதிரவன் ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் இரண்டாம்புலிக்காடு கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து கொடுத்த புகாரின் பேரில் கதிரவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளர் அண்ணாதுரை விசாரணை நடத்தி வருகின்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x