

கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீதம் இடம் ஒதுக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் 500 துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை இன்று வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் திருப்திகரமாக செயல்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத இடங்களை கரோனா தொற்று நோய் சிகிச்சைக்காக ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வருபவர்களுக்கு மட்டுமல்லாமல் நோய்த் தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
அதற்கான பணத்தை தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் 1,500 ரூபாயும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாயும் நிவாரண தொகையாக வழங்க வேண்டும்.
தேசிய பேரிடராக கரோனா அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் பிரதமர் அலுவலகம் மூலம் இதற்காகப் பெறப்படும் நிதியை உடனடியாக கரோனா நோய்த் தடுப்பு மருத்துவத்திற்காக செலவிட வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.