ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் இன்றிரவு கிளம்புகிறது: மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் ஜூலை 7 தூத்துக்குடி வருகை- பயணிகள் கப்பலில் ஏறத் தொடங்கினர்

ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் இன்றிரவு கிளம்புகிறது: மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் ஜூலை 7 தூத்துக்குடி வருகை- பயணிகள் கப்பலில் ஏறத் தொடங்கினர்
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் மாலத்தீவில் சிக்கி தவிக்கும் 700 இந்தியர்களுடன் இந்திய கடற்படை கப்பல் 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' நாளை மறுநாள் (ஜூன் 07) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வந்தடைகிறது.

இந்த கப்பல் இன்று இரவு மாலே துறைமுகத்தில் இருந்து கிளம்புகிறது. பயணிகள் கப்பலில் ஏறத் தொடங்கினர்.

கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் 'ஆபரேசன் சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பல் மூலம் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வாறு இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கடந்த 2-ம் தேதி இந்திய கடற்படை கப்பல் 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, கரோனா சோதனைக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு- தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் மாலத்தீவின் மாலே துறைமுகத்துக்கு இன்று போய் சேர்ந்தது. இதனை தொடர்ந்து மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் 700 இந்தியர்களை அழைத்துக் கொண்டு இந்தக் கப்பல் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வருகிறது.

மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தில் இருந்து இன்று இரவு கிளம்பும் 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பலில் மாலத்தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பயணிகள் மாலை 3 மணி முதல் கப்பலில் ஏறத் தொடங்கினர்.

சுமார் 30 மணி நேர பயணித்துக்கு பிறகு இக்கப்பல் நாளை மறுநாள் (ஜூன் 07) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கரித்தளத்துக்கு வந்து சேருகிறது.

கப்பலில் வருபவர்கள் கரோனா பரிசோதனை மற்றும் சுங்க, குடியுரிமை சோதனைகளுக்கு பிறகு அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த கப்பலில் வருவோரில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களும் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் வரும் 17-ம் தேதி ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 இந்தியர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வரவுள்ளது குறிப்பிடதக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in