Published : 05 Jun 2020 03:23 PM
Last Updated : 05 Jun 2020 03:23 PM

அகில இந்திய மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்: கலி.பூங்குன்றன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அகில இந்திய மருத்துவ கோட்டாவில் ஓபிசி பிரிவினருக்கு என தனியாக எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

''ஒவ்வொரு கல்வியாண்டும் மாநிலங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்களையும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்நிலையில், 2020-ம் கல்வியாண்டுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை மருத்துவக் கலந்தாய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில், மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 981 இடங்களில், 6,115 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு 111 இடங்களும், பட்டியலினத்தவர்களுக்கு 1,172 இடங்களும், பட்டியலின மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், பழங்குடி இனத்தவர்களுக்கு 573 இடங்களும், பழங்குடியின மாற்றுத் திறனாளிகளுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பல் மருத்துவ மேற்படிப்பில் மொத்தமுள்ள 274 இடங்களில், 211 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், 42 இடங்கள் பட்டியலினத்தவர்களுக்கும், 21 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு என தனியாக எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' எனக் கோரி, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும், அந்த மனுவில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்புக் கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 941 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடங்கள் மாநில அரசு வசம் இருந்தால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பங்கை பெற்றிருப்பர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல், மருத்துவ மேற்படிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளையும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சட்டவிதிகளையும் மீறிய செயல் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிதிகளின்படி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கலி.பூங்குன்றன் கோரியுள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x