

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பை அடுத்து தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் முதலீட்டை ஈர்க்க ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் நாளை ‘ஒளிரும் தமிழ்நாடு’ மாநாடு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நாளை (6.6.2020), காலை 11 மணி அளவில், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெறும், "ஒளிரும் தமிழ்நாடு" என்ற காணொலி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் அவர் தலைமையுரை ஆற்றுகிறார். அதோடு, தமிழ்நாட்டின் தொழில் வளம் பற்றிய கையேட்டினை முதல்வர் வெளியிடுகிறார்.
இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். சிஐஐ (CII) தலைவர் ஹரி தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் தினேஷ், சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழுமத்தின் துணைத்தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.