Last Updated : 04 Jun, 2020 07:46 PM

 

Published : 04 Jun 2020 07:46 PM
Last Updated : 04 Jun 2020 07:46 PM

அரசுப் பேருந்துகளில் 60 சதவீதத்துக்கு மேல் பயணிகளை ஏற்றினால் நடவடிக்கை; ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை

கரோனா ஊரடங்கின்போது இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் 60 சதவீதத்துக்கு மேல் பயணிகளை ஏற்றினால் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துப் போக்குவரத்து ஜூன் 1-ல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஊரடங்கு காலத்தில் 50 சதவீதப் பேருந்துகளை இயக்கவும், ஒவ்வொரு பேருந்திலும் 60 சதவீதப் பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவை மீறி சில இடங்களில் 60 சதவீதத்துக்கு மேல் பயணிகளை ஏற்றுவதாகவும், முகக்கவசம் அணியாமல் பயணிகள் பயணம் செய்வதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, மதுரை மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஒவ்வொரு கிளைக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

"அரசு உத்தரவைப் பின்பற்றி பேருந்துகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து அனுமதிக்கப்பட்ட 60 சதவீதப் பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும். பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகளுக்கு நடத்துநர்கள் கிருமிநாசினி வழங்க வேண்டும்.

பேருந்தில் பயணிகள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி இருக்கையில் அமர்வதை நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும். பயணிகள் அனைவரும் பின் படிக்கட்டுகள் வழியாக ஏறி முன்புறப் படிக்கட்டு வழியாக இறங்க அனுமதிக்க வேண்டும்.

இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் பயணிகளை ஏற்றுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் கிளை மேலாளர்கள், பேருந்து நிலைய மேலாளர்கள் தனிக்கவனம் செலுத்தி ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

துணை மேலாளர்கள் (இயக்கம்) மற்றும் உதவிப் பொறியாளர்கள் (இயக்கம்) ஆகியோர் முக்கியப் பேருந்து நிறுத்தங்கள்/ நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் பயணிகள் ஏறுவதைக் கண்காணிக்கவும், பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப கிளைகளிலிருந்து கூடுதல் பேருந்துகளை பெற்று இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x