Published : 04 Jun 2020 07:24 AM
Last Updated : 04 Jun 2020 07:24 AM

மீண்டும் ஜவஹர் பழனியப்பன் பொறுப்புக்கு செல்கிறது குமுதம் நிர்வாகம்: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு

சென்னை

குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகம், மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனி யப்பன் பொறுப்புக்கு செல்லும் வகையில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குமுதம் பப்ளிகே ஷன்ஸ் தற்காலிக தலைவராக கே.கே.பாலுவை நியமித்தும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

‘குமுதம்’ வார இதழை தொடங்கிய எஸ்.ஏ.பி.அண்ணா மலை செட்டியாரின் மறைவுக்கு பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்து இதழ்களுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் அவரது மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பொறுப்பு வகித்தார். ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபல டாக்டராக பணிபுரிவதால் அவரது தாயார் கோதை ஆச்சி, குமுதம் குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். முதுமை காரணமாக அவரால் அப்பதவியை வகிக்க இயலாத சூழலில் குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி.வி.பார்த்தசாரதியின் மகனான என்.வரதராஜன் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.

அதன் பிறகு குமுதம் நிர்வாக விவகாரங்களில் ஜவஹர் பழனியப்பனுக்கும், வரதராஜனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. வரதராஜன் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகத்தை நஷ்டத்தில் தள்ளிவிட்டார் என்றும், நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் ஜவஹர் பழனியப்பன் புகார் சுமத்தினார். பதிலுக்கு, வெளிநாட்டு பிரஜையான ஜவஹர் பழனியப்பன் குமுதம் நிர்வாகத்தில் அதிக பங்குகளை வைத்திருக்க இயலாது என வரதராஜனும் குற்றம்சாட்டினார்.

அதன்பிறகு ஜவஹர் பழனியப்பனுக்கும், வரதராஜனுக்கும் இடையே கடந்த 2010-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 2011 செப்.28-ம் தேதி ஜவஹர் பழனியப்பன் தரப்புக்கு அழைப்பு விடுக்காமல் நிர்வாகக் குழுவை கூட்டிய வரதராஜன், தனக்கு ஆதரவாகவும், ஜவஹர் பழனியப்பன் தரப்புக்கு எதிராகவும் சில திருத்தங்களைக் கொண்டு வந்தார். அதுதொடர்பாக நிறுவனங்களின் பதிவாளரிடமும் படிவம் சமர்ப்பித்தார்.

இதை எதிர்த்து ஜவஹர் பழனியப்பனும், அவரது தாயார் கோதையும் சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். குமுதம் குழுமத்தை நிர்வகித்து வந்த பி.வரதராஜன், பி.சீனிவாசன் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இம்பிரிண்ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய சென்னை அமர்வில் தலைவர் பி.எஸ்.வி.பிரகாஷ் குமார், தொழில்நுட்ப உறுப்பினர் எஸ்.விஜயராகவன் முன்பாக நடந்தது. ஜவஹர் பழனியப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சுதீப்தோ சர்க்கார், பி.எஸ்.ராமன் ஆகியோரும், வரதராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.முகர்ஜி, வழக்கறிஞர் பூர்வஜா ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

குமுதம் குழுமத்தின் பெருவாரியான பங்குகளை, அதாவது 3,32,640 மதிப்பிலான 66 சதவீத பங்குகளை ஜவஹர் பழனியப்பனும், அவரது தாயார் கோதையும் வைத்துள்ளனர். எனவே, அவர்களின் பங்குகளை தன்னிச்சையாக ரத்து செய்து வரதராஜன் கொண்டு வந்த திருத்தங்கள் சட்டவிரோதமானது. அது செல்லாது. மனுதாரரான ஜவஹர் பழனியப்பன் மற்றும் அவரது தாயாரின் சட்ட ரீதியிலான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

குமுதம் பப்ளிகேஷன்ஸ் சார்பில் ஜவஹர் பழனியப்பன், கோதை ஆகியோர் தங்களுக்குள்ள பங்குகளின் அடிப்படையில் 2 பேரை கூடுதல் இயக்குநர்களாக பரிந்துரைக்கலாம். தற்போது குமுதம் பப்ளிகேஷன்ஸ் குழுவுக்கு புதிய தலைவரை நியமிப்பது அவசியம் என்பதால் தற்காலிக தலைவராக தேசிய கம்பெனி சட்ட வாரிய முன்னாள் துணைத் தலைவரான கே.கே.பாலுவை 6 மாத காலத்துக்கு நியமிக்கிறோம். அவர் நிர்வாகக் குழு மற்றும் ஆண்டு பொதுக்குழுவைக் கூட்டி இதுதொடர்பான மற்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் குமுதம் நிர்வாகம் மீண்டும் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பொறுப்புக்கு செல்லும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x