Last Updated : 03 Jun, 2020 08:03 PM

 

Published : 03 Jun 2020 08:03 PM
Last Updated : 03 Jun 2020 08:03 PM

உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை: வழக்கில் தொடர்புடையவர்களுடன் வாட்ஸ் அப் காலில் பேசிய நீதிபதிகள்

உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக வழக்கில் தொடர்புடையவர்களுடன் நீதிபதிகள் வாட்ஸ்அப் காலில் பேசி வழக்கு தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர்.

இந்த நடைமுறையால் தேவையில்லாமல் அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வருவதும், நேரம் வீணாவதும் தடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி குரூப் வெள்ளரிக் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தவமணி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், அரசு தரப்பில் வழக்கு தொடர்பான போதுமான விபரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

அந்த விபரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வாட்ஸ் அப்பில் அழைத்து வழக்கு தொடர்பான விபரங்களை பெற்று தீர்வு காண முடியும். இதனால் மனுதாரர், அரசு தரப்பு இரண்டும் போதுமான விபரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்றனர்.

பின்னர் மேலூர் வட்டாட்சியரை நீதிபதிகள் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது பேசிய வட்டாட்சியர் தன் போனில் வாட்ஸ்அப் வசதியில்லை என்றும், நீதிபதிகளிடம் செல்போனில் பேசுவது பயமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், அனைத்து அதிகாரிகளும் செல்போனில் வாட்ஸ் ஆப் வசதி வைத்திருக்க வேண்டும். இதனால் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும். மடியில் கனமிருந்தால் தான் பயம் இருக்கும். அதிகாரிகள் பயமின்றி பணியாற்ற வேண்டும் என்றனர். பின்னர், மனுவிற்கு வாட்டாட்சியர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதேபோல், திருவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கிலும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞருடன் வாட்ஸ்அப் வீடியோவில் அழைத்து நீதிபதிகள் பேசினர்.

பின்னர் நீதிபதிகள், நீதித்துறையில் ஹைடெக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண விரும்புகிறோம். மனு செய்யும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்.

அரசுத் தரப்பில் ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் வாட்ஸ்அப் எண்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இந்த வசதியில் வழக்கின் விபரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் பேசி பெற முடியும். இதனால் தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு வருவது தவிர்க்கப்படும். நீதிமன்றத்தின் நேரமும் வீணாகாது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x