

தலைமைச் செயலர் சண்முகம் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி சண்முகம் நியமிக்கப்பட்டார். சண்முகம் 1960-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிறந்தவர்.
இவர் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் முதுநிலை வேளாண் பட்டப்படிப்பு முடித்தார். பின்னர் சிவில் தேர்வு எழுதி இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்று 1985-ம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
பயிற்சி சப் கலெக்டராக தஞ்சையில் பணியாற்றிய அவர், நெல்லை சேரன்மாதேவி சப் கலெக்டராகவும் பணியாற்றினார். பின்னர் வணிவரித்துறை துணை ஆணையர், பட்டுவளர்ச்சி இயக்குனர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். 1995 முதல் 1998 வரை சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியானார்.
2001-ம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக மாற்றப்பட்டார். பின்னர் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்எஸ் பழனிமாணிக்கத்தின் கீழ் நிதித்துறை செயலாளராக அயல்பணியில் சில ஆண்டுகள் பணியாற்றினார். 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சியிலும் நிதித்துறை செயலாளராக தொடர்ந்தார். தொடர்ந்து நிதித்துறைச் செயலராக தொடர்ந்த அவர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப்பின் தலைமைச் செயலராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020 ஜூலை. 31 வரை உள்ளது. ஜூலை 31- ல் ஓய்வு பெற உள்ளார். கரோனா தொற்றுப்பிரச்சினையில் டாஸ்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள சண்முகத்தின் நீண்ட கால அனுபவம் காரணமாக பல்வேறு ஆய்வுக்கூட்டங்களை வழி நடத்தி வருகிறார்.
தற்போதுள்ள பிரச்சினையில் சண்முகத்தின் தேவை அதிகம் உள்ளதாக தமிழக அரசு கருதியதன் பேரில் அவரது பணியை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படியில் மத்திய அரசு அவரது பதவி காலத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஜூலை-31 அன்று ஓய்வுபெற உள்ள நிலையில் ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்.31 அன்று அவர் ஓய்வு பெறுவார்.