Published : 03 Jun 2020 05:43 PM
Last Updated : 03 Jun 2020 05:43 PM

கரோனா பரிசோதனையை காரணம் காட்டி நோயாளிகளுக்கு அவசர சிகிச்சையை தாமதம் செய்யக்கூடாது: அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு 

அரசு மருத்துவமனைகளில் ‘கரோனா’ பரிசோதனையை காரணம் சொல்லி மகப்பேறு உள்ளிட்ட அவசர சிகிச்சைகளை தாமதம் செய்யக்கூடாது என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ‘கரோனா’ பரவிய ஆரம்பக்கட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் முக்கிய உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவுகள் மூடப்பட்டன. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ‘கரோனா’ சிகிச்சையுடன் புறநோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், ஒரு கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கு நோயாளிகள் கூட்டம் அலைமோதியது.

அப்போது ‘கரோனா’ வேகம் காட்டவே அச்சமடைந்த மக்கள், சாதாரண சிகிச்சைகளுக்கு கூட அரசு மருத்துவமனைகள் பக்கம் எட்டிப்பார்க்கவே தயங்கியதால் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவுகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கடந்த சில வாரமாக ‘கரோனா’ பற்றிய அச்சம் போகவே மக்கள் வழக்கம்போல் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் தற்போது வழக்கம்போல் புற நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைகள் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகளிலும் முன்போல் நோயாளிகள் இயல்பாக சிகிச்சைகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மகப்பேறு உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு வருவோருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்தபிறகே சிகிச்சைகள் தொடங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் கூறுகையில், ‘‘சில நாட்களுக்கு முன் என்னோட கர்ப்பிணி மனைவி, தத்தனேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அங்கு அவரது நிலமை மோசமடையவே நான், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? என்று மருத்துவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள் ‘கரோனா’ பரிசோதனை செய்தபிறகே சிகிச்சை தொடங்கப்படும் என்றனர். அதனால், வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன்.

தற்போது குழந்தை பிறந்த என் மனைவியும், குழந்தையும் நலமுடன் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் மருத்துவ செலவு ரூ.40 ஆயிரம் ஆகியுள்து.

அரசு மருத்துவமனையில் உடனே சிகிச்சைக்கு அனுமதித்து இருந்தால் இந்த செலவு எனக்கு வந்திருக்காது. தற்போது பணத்தை கட்ட முடியாமலும், மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வர முடியாமலும் தவிக்கிறேன்’’ என்றார்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மகப்பேறு உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு வருவோருக்கு உடனே சிகிச்சையை தொடங்கிவிடுவோம். அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்கிறோம். கரோனா பரிசோதனையை காரணம் சொல்லி அவசர சிகிச்சையை தாமதம் செய்ய மாட்டோம், ’’ என்றார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரியாவிடம் கேட்டபோது, ‘‘கரோனா பரிசோதனையை காரணம் காட்டி மருத்துவமனைகளில் மகப்பேறு உள்ளிட்ட அவசர சிகிச்சைகளை தாமதம் செய்யக்கூடாது என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x