நோய்த் தொற்றைக் கண்டறிய அரசுப் பேருந்து பயணிகளிடம் சுயவிவர படிவம் வழங்கல்: விவரங்களை தெரிவித்தவர்களே பயணிக்க அனுமதி

நோய்த் தொற்றைக் கண்டறிய அரசுப் பேருந்து பயணிகளிடம் சுயவிவர படிவம் வழங்கல்: விவரங்களை தெரிவித்தவர்களே பயணிக்க அனுமதி
Updated on
1 min read

திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் நோய்த் தொற்றைக் கண்டறிய ஏதுவாக சுயவிவர படிவம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 50 சதவீதம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் சுயவிவரங்களை கேட்டறிந்து, அதற்கான உரிய படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த படிவத்தில் பயணியின் பெயர், வயது, பாலினம், தொழில், தற்போதைய முகவரி, பயணிக்கும் காரணம், அடையாள அட்டை எண், கடந்த 14 நாட்களில் வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு சென்றவரா, ஆம் எனில் சென்றுவந்த இடம், தேதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளீர்களா, ஆம் எனில், தேதி, வீட்டுத்தனிமை, தனிமைப்படுத்துதல் மையம், சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவற்றின் விவரம், சுவாச நோய், இருதய நோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய், அதிரத்த அழுத்த நோய் ஆகிய நாட்பட்ட நோய்கள் இருந்தால் அவற்றின் விவரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டிருந்தது.

பயணிகள் தங்கள் சுயவிபரங்கள் அடங்கிய தகவல்களை படிவங்களில் நிரப்பி போக்குவரத்து அலுவலர்களிடம் கொடுத்த பிறகே பேருந்துகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் நாகர்கோவிலுக்கு செல்லவேண்டிய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in