Published : 03 Jun 2020 04:13 PM
Last Updated : 03 Jun 2020 04:13 PM

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் மருத்துவமனைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

உடல் உறுப்பை நன்கொடை மூலம் பெறும் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிமுறைகளை தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 3) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"தமிழக அரசு முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்படி கரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் பயனை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை சில நிபந்தனைகளோடு மீண்டும் செயல்படுத்த முதல்வர் ஆணையிட்டார்.

இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் உடல் உறுப்பை நன்கொடை மூலம் பெறும் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிமுறைகளை இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

நன்கொடையாளர் மற்றும் பெறுநர் மருத்துவமனைகளுக்கான வழிகாட்டுதல்கள்:

இத்திட்டத்தை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவமனையில் செயல்படுத்தக்கூடாது.

இம்மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாளர்களுக்கு தனி பாதை அமைத்து செயல்பட வேண்டும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தனி வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளர் மற்ற பொது நோயாளிகள் / சந்தேகத்திற்கிடமான கோவிட் நோயாளிகளுடன் ஒரே தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடாது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ வல்லுநர்கள், ஆலோசகர்கள், பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறுவை அரங்கத்தில் பணியாற்றும் நபர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு பிரத்யேகமாக பயன்படுத்த வேண்டும். மேலும், அவர்களின் சேவைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தப்படக்கூடாது.

இத்திட்டத்திற்கான முழு குழுவினரையும் குறிப்பிடப்பட்ட கால இடைவெளியில் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களின்படி கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

முழு உடல் கவசம், கிருமிநாசினிகள், கை சுத்தம் செய்யும் திரவங்கள் ஆகியவை நோயாளி மற்றும் உடனாளர்களுக்கு உரிய அளவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை நிலையான கிருமிநாசினி நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்தும் இம்மையங்களில் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகள் ஒரு உறுதிமொழியைக் அளிக்க வேண்டும்.

மேலும், கொடையாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ள நோயாளிகள் பின்பற்ற வேண்டிய விரிவான நடைமுறைகளும் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வழிகாட்டுமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உடல் உறுப்பு மாற்று ஆணையத்தால் கண்காணிக்கப்படும்.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோயம்புத்தூரில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த 31-ம் தேதி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x