Published : 03 Jun 2020 03:58 PM
Last Updated : 03 Jun 2020 03:58 PM

அகில இந்திய தொகுப்பு மருத்துவ படிப்புகளில்50 சதவீதத்தை ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

மருத்துவ படிப்பில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் மத்திய அரசுக்கோட்டாவுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இடம் ஒதுக்காமல் 4 ஆண்டுகளாக புறக்கணிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டப்பின், தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய இட ஒதுக்கீடு நான்காண்டுகளாக ஒதுக்கப்படவில்லை.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய தொகுப்பிற்கு (ALL INDIA QUOTA) அனைத்து மாநிலங்களும் முதுநிலைப் படிப்பிற்காக 7981 இடங்களை அளித்திருந்தாலும், அதில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.

மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்ட 1378 இடங்களில் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத அடிப்படையில் 371 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு உரிமை பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு 653 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொகுப்பில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையினை நடத்தும் மருத்துவக் கலந்தாய்வுக்குழுவின் ‘மருத்துவ மேற்படிப்புக் கல்வி ஒழுங்குமுறை 2000’-ன்படி, ‘மருத்துவப் படிப்புக்கான இடங்களில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் நடைமுறைப்படுத்தும் இட ஒதுக்கீடு முறையே நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டும் ஏன் ஒதுக்கவில்லை என தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தீர்மானம் நிறைவேற்றின.

திமுக, பாமக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசும் ஓபிசி மாணவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், இளநிலை மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு உள்ளிட்டவற்றில் மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சகவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

“இளநிலை மருத்துவ படிப்புக்காக 15% இடங்களும், மருத்துவ மேற்படிப்புக்காக 50% இடங்களும், மாநிலத்தின் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகிறது. அப்படி அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அதை நிகழ் கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும்.

குறிப்பாக தமிழகத்திலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத இடத்தை OBC, BC, MBC பிரிவினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும். ஏனெனில் மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27% இடத்தை OBC பிரிவுக்கு மட்டும் ஒதுக்கவேண்டும் என்ற விதி இருந்தும் அதை இதுவரை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.

அதேவேளையில் தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் மாநில அரசின் ஒதுக்கீடு இடங்களில் OBC, BC, MBC உள்ளிட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது” எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x