Last Updated : 03 Jun, 2020 03:20 PM

 

Published : 03 Jun 2020 03:20 PM
Last Updated : 03 Jun 2020 03:20 PM

காது கேளாதோர் குறிப்பு மொழி உணர்ந்து தொடர்பு கொள்ள சிறப்பு முகக்கவசம்; புதுச்சேரி முதல்வரிடம் வழங்கினார் தமிழக மருத்துவர்

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு புதிய வகை முகக்கவசத்தை அணிவிக்கிறார் முதல்வர் நாராயணசாமி. அருகே அமைச்சர் கந்தசாமி, முகக்கவசத்தை உருவாக்கிய மருத்துவர் முகமது ஹக்கீம் 

புதுச்சேரி

காது கேளாதோர் குறிப்பு மொழி உணர்ந்து தொடர்பு கொள்ள சிறப்பு முகக்கவசம் உருவாக்கியுள்ள திருச்சி மருத்துவர், புதுச்சேரி முதல்வரிடம் 500 முகக்கவசங்களை இன்று இலவசமாக வழங்கினார். தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் இதை தந்துள்ள அவர், அடுத்த வாரம் கேரளத்தில் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய தொடங்கியுள்ளனர். சாதாரண மக்கள் பலரும் முகக்கவசம் அணிந்து பணிகளை தொடங்கி விட்டனர்.

அதே நேரத்தில், காது கேளாதோர் பற்றி சிந்திக்க வேண்டும். காது கேளாதோர் குறிப்பு மொழி மூலமும் நாம் உச்சரிக்கும் உதடுகளை கவனிப்பதன் மூலமும் உற்று கவனித்து அர்த்தத்தைப் புரிந்து கொண்டு தகவல் பரிமாற்றம் செய்வது வழக்கம். சாதாரண முகக்கவசம் அவர்களுக்கு பலன் தராது. காது கேட்காத நபர் நாம் சொல்வதை நமது உதடுகள் உச்சரிப்பை பார்க்கும் வகையில் முகக்கவசம் தேவை. அதை உருவாக்கிய மருத்துவர் முகமது ஹக்கீம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் இன்று (ஜூன் 3) 500 முகக்கவசங்களை இலவசமாக வழங்கினார்.

பிரத்யேக முகக்கவசம்

காது கேளாத நபர்களுக்கு உதவ சிறப்பு முகக்கவச உருவாக்கம் தொடர்பாக திருச்சி துவரங்குறிச்சியை சேர்ந்த அவசர நிலை மருத்துவரான முகமது ஹக்கீம் கூறியதாவது:

"காது கேளாத நபர்கள் மற்றவர்கள் பேசுவதை உதடு அசைவு மூலம் உன்னிப்பாக கவனித்து அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வார்கள். முகக்கவசம் உதடு, மூக்கு மூடும் வகையில் இருக்கும். இது காது கேளாதோர் தகவல் பரிமாற்றத்துக்கு தடையாக இருந்தது.

வாய் பகுதி தெரிந்தால் காது கேளாதோர் உதடு அசைவை பார்த்து குறிப்பு மொழியை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதனால் அவர்களுக்கான முகக்கவசம் செய்துள்ளேன்.

காதுகளில் மாட்டிக்கொள்ளக்கூடிய சுருங்கி நீழும் 'எலாஸ்டிக்' கயிற்றைப் பயன்படுத்தி எளிதான பொருட்களால் தயாரிக்கப்பட்டது இந்த கவசம். மூக்குப்பிடிப்புப் பகுதியின் வடிவமைப்பு அணிபவரின் வசதிக்கு ஏற்றவாறு சரி செய்யலாம், ரப்பர் பொருளால் தயாரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒளி ஊடுருவும் தாளால் தயார் செய்யப்பட்டது. இதனால் வாய் அசைவை பார்க்க முடியும். தமிழகத்தில் இம்முறையை தெரிவித்து அரசு ரூ.15-ல் வடிவமைத்து 81 ஆயிரம் பேருக்குத் தந்துள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரிக்கு 500 முகக்கவசங்களை முதல்வரிடம் தந்துள்ளேன். இதேமுறையில் அனைவருக்கும் தருவது அவசியம் என்று தெரிவித்துள்ளேன். அடுத்த வாரம் கேரளத்துக்கு சென்று அரசு தரப்பை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.

என்-95 தர நிலை முகக்கவசம் தரும் பாதுகாப்பை இப்புதிய கவசமும் தரும். அதாவது, 95 சதவீதம் பாக்டீரியா , நுண்துகள் பொருட்களை வடிகட்டும் திறன் இந்த முகக்கவசங்களுக்கு உண்டு. புதிய வகை முகக்கவசத்தின் அவசியத்தை அரசு தரப்புக்கு தெரிவித்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.

காது கேளாத மாணவர்கள் முதல்வர் அறையில் புது முகக்கவசம் அணிந்து பார்த்து மகிழ்ந்தனர். அவர்கள் தரப்பில் கூறுகையில், "காது கேளாதோர் தகவல் தொடர்பியலில் தற்போது புது தடைகளை சந்தித்து வருகிறோம். தற்போது கல்வி இணையத்தில் மாறுகிறது. காணொலி காட்சி மூலம் கலந்துரையாடலில் நாங்கள் பங்கேற்க முடியாது. அதில் பங்கேற்போர் வாயை முழுவதுமாக மூடி முகக்கவசம் அணிந்திருப்பார்கள். அது முக்கிய காரணம். புதிய வகை முகக்கவசம் நிச்சயம் எங்களுக்கு பயன் தரும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x